நீலகிரியில் புலி அடித்து பெண் பரிதாபமாக பலி… பொதுமக்கள் அச்சம்
நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு பகுதியில் பழங்குடியின பெண்ணை புலி அடித்து கொன்று சப்பிட்ட சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆட்கொல்லி புலியை பிடிக்க வேண்டும் என பழங்குடியின மக்கள் கோரிக்கை.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலி காப்பகமானது 688 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டுள்ளது. இந்த காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு பகுதியில் யானை பாடி, லைட் பாடி, தேக்குபாடி உள்ளிட்ட 3 பழங்குடியின குடியிருப்பு உள்ளன. இந்த குடியிருப்புகளை சுற்றி கடந்த இரண்டு மாதமாக சுற்றி திரிந்து வரும் ஒரு ஒற்றை புலி பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. குறிப்பாக கடந்த மாதன் என்ற வேட்டை தடுப்பு காவலரை தாக்கியதில் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.
இந்த நிலையில் அந்த புலியை பிடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில் நேற்று இரவு மாரி என்ற பெண்ணை அடித்து கொன்று புதருக்குள் இழுத்து சென்று சாப்பிட்டுள்ளது. அந்த பெண்ணை நேற்று மாலை முதல் காணவில்லை என்று கூறி கிராம மக்கள் தேடினர். இரவு நேரம் என்பதால் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து இன்று காலை மீண்டும் தேடிய போது வளர்ப்பு யானை முகாம் அருகே குடியிருப்பு பகுதியை ஒட்டி உள்ள புதரில் உடல் கண்டுபிடிப்பு.
இதனையடுத்து உடலை மீட்ட வனத்துறையினர் பிரேத பரிசோனைகாக உதகைக்கு அனுப்பி வைத்தனர். இந்தபுலி ஏற்கனவே பொதுமக்களை அச்சுறுத்தி வந்த நிலையில் வனத்துறையினர் அலட்சியமாக இருந்ததால் பெண் பலியானதாக குற்றம்சாட்டும் கிராம மக்கள் உடனடியாக பிடிக்க கோரிக்கைவிடுத்துள்ளனர்.