போக்குவரத்து பெண் தலைமை காவலரை கன்னத்தில் அறைந்த அதிமுக வழக்கறிஞர் அராஜகம்…!

சிவகாசியில் போக்குவரத்து பெண் தலைமை காவலரை கன்னத்தில் அறைந்த அதிமுக வழக்கறிஞர் கைது!சிவகாசி மருது பாண்டியர் மேட்டு தெருவில்  குடியிருந்து, வழக்கறிஞராக இருப்பவர் முத்து மணிகண்டன்( வயது 35). இவர் இபிஎஸ் தலைமையிலான அதிமுகவின் விருதுநகர் மேற்கு மாவட்ட ஜெயலலிதா பேரவை துணைச் செயலாளராகவும், பொறுப்பில் உள்ளார். 

இவர் இருசக்கர வாகனத்தில் சிவகாசி- திருத்தங்கல் சாலையில் செல்லும்போது எதிரே சைக்கிளில் வந்தவர் மீது மோதியதில் தகராறு ஏற்பட்டது. சைக்கிளில் வந்த நபரை வழக்கறிஞர் தாக்க முற்பட்டபோது, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற, பணியில் இருந்த போக்குவரத்து பெண் தலைமை காவலர் ராஜம்மாள் முத்துமணி மணிகண்டனை தட்டி கேட்டதாக  கூறப்படுகிறது. 

இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் பெண் காவலர்  ராஜம்மாளை வழக்கறிஞர் முத்து மணிகண்டன் கன்னத்தில்அறைந்தார். இச்சம்பவம் குறித்து சிவகாசி நகர் காவல் நிலைய போலீசார் வழக்கறிஞர் முத்து மணிகண்டனை கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், அவர் குடி போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. பெண் காவலரை பணி செய்ய விடாமல் தடுத்து, ஆபாசமாக பேசி தாக்கியதாக அதிமுக வழக்கறிஞர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

பெண் காவலரை வழக்கறிஞர் தாக்கிய சம்பவ இடத்தை சிவகாசி காவல் துணை கண்காணிப்பாளர் பொறுப்பில் உள்ள சபரிநாதன் தலைமையிலான போலீசார்கள் நேரில் பார்வையிட்டு அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வெண்காவலரை வழக்கறிஞர் தாக்கிய சம்பவம் சிவகாசி வட்டார  போலீசார்கள் தரப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *