500 ஜல்லிக்கட்டுக்கு மேல் களம் கண்ட காளைக்கு இறுதி அஞ்சலி… நெகிழ்ச்சியுடன் வழியனுப்பிய ரசிகர்கள்
ஏழு வருடங்களில் 500க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு களம் கண்ட காளைக்கு இறுதி அஞ்சலி செய்த ரசிகர்கள் . சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே கிருங்காகோட்டையில் மெக்கானிக் ஜெயமணி என்பவருக்கு சொந்தமானது நாச்சிகாளை. தமிழக அளவில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்று பிடிபடாமல் நின்று விளையாடி பிரபலமானது .
எந்த ஊரில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டாலும் நாச்சிகாளைக்கு வெற்றிலை பாக்கு வைத்து அழைத்து செல்வது வழக்கம். கிருங்காக்கோட்டை நாச்சிகாளைக்கு என தனி ரசிகர் பட்டாளமே உண்டு இந்த காளை. மதுரை, கோவை, திருப்பூர், தருமபுரி, சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் 500 க்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று பல வீரர்களை நாச்சி காளை பந்தாடிய வரலாறும் உண்டு.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றி பெற்று பெயரும், புகழும் இலட்சக்கணக்கான பல பரிசுகளை அள்ளிக்கொண்டு வந்து கிருங்காகோட்டை கிராமத்திற்கு பெயர் பெற்று தந்தது.இந்த நாச்சி காளை நேற்று திடீரென உயிரிழந்தது. நேற்று இரவு முதல் இன்று பிற்பகல் வரை ஊரின் மையப் பகுதியில் காளைக்கு பொதுமக்கள் இளைஞர்கள் ஜல்லிக்கட்டு அமைப்பின் நிர்வாகிகள் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வந்தனர்
துண்டு, பட்டு வேட்டி, மாலைகளுடன்வந்து நாச்சிகாளைக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இன்று பிற்பகலில் நாச்சி காளைக்கு இறுதி சடங்குகள் செய்யப்பட்டு உரிமையாளர் ஜெயமணிக்கு சொந்தமான தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள், ரசிகர்கள், கிராம மக்கள் பெண்கள். உள்ளிட்டோர் கண்ணீருடன் நாச்சியை நல்லடக்கம் செய்தனர்.