ராணுவ தளவாட தொழிற்சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து காத்திருப்பு போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள்.
சூலூரில் அமைக்கப்பட உள்ள ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலைக்கு நிலம் கையகப்படுத்தவும் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மற்றும் பெண்கள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
கோவை மாவட்டம் சூலூர் பகுதிக்கு உட்பட்ட வாரப்பட்டி ஊராட்சியில் டிட்கோ சார்பில் ராணுவ தளவாடங்கள் உற்பத்தி தொழிற்சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தப்பட்டு வருவதாக கூறி அப்பகுதி மக்கள் பல நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே இப்பகுதியில் சிட்கோ அமைக்கப்படுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி சிட்கோ திட்டம் கைவிடப்பட்டது.
இந்நிலையில் அதே இடத்தில் ராணுவ தளவாட உற்பத்தி தொழில் கூடம் அமைய உள்ளதாக கூறப்படுகிறது.தளவாடம் அமைய உள்ள இடத்திற்கு அருகிலேயே தனியார் இடத்தில் பந்தல் அமைத்து அப்பகுதி கிராம மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளனர்.
இந்த போராட்டத்தை டெல்லி விவசாய போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் தியாகத் மற்றும் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ஈசன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். விவசாயிகள் மற்றும் பெண்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
அரசு ராணுவ தளவாடம் அமைப்பது தொடர்பான தெளிவான அறிக்கை அளிக்கும் வரை தொடர்ந்து போராட்டமானது நடைபெறும் என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். பின்னர் ராணுவ தளவாட தொழிற்சாலை அமைப்பதற்கு எதிராக உடனடியாக அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என கூறியும் கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய விவசாயிகள் சங்க தலைவர் ராகேஷ் தியாகத், விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு நிலங்களைப் பற்றி தொழிற்சாலை அமைப்பதற்காக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விட்டு வருவதை வாடிக்கையா கொண்டுள்ளது இதற்கு விவசாயிகள் மசிய கூடாது,
உடம்பில் உயிர் இருக்கும் வரை நமது மண்ணையும் நமது பூமியும் காக்க விவசாயிகள் போராட வேண்டும்.விவசாயிகள் முன்னெடுக்கும் அனைத்து போராட்டங்களுக்கும் அகில இந்திய விவசாயிகள் சங்கம் உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார். விவசாயத்தையும் விவசாய நிலங்களையும் சீரழிக்கும் திட்டத்தை ஒருபோதும் இப்பகுதி கிராம மக்கள் அனுமதிக்க மாட்டோம் அரசு உடனடியாக இதுகுறித்து நடவடிக்கை எடுத்து தெளிவான விளக்கங்கள் கொடுக்கும் வரை தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.