400 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை கேட்டு கரும்பு விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம்
கபிஸ்தலம் அருகே திருஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய 400 கோடி ரூபாய் நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க கோரி இவ் ஆலை முன் கரும்பு விவசாயிகளின் காத்திருப்பு போராட்டம் இன்று 14வது நாளாக தொடர்கிறது. இன்று விவசாயிகள் தலையில் முக்காடு போட்டு நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகளுக்கு 400 கோடி ரூபாய் அளவிற்கு பணத்தை வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. இந்நிலையில் இவ் ஆலை மூடப்பட்டது.
மூடப்பட்ட ஆலையை கால்ஸ் டிஸ்லரீஸ் என்ற நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. தங்களுக்கு சேரவேண்டிய பணத்தை உடனே வழங்க வேண்டும் என்று பாதிக்கப்பட்ட கரும்பு விவசாயிகள் திருஆரூரான் சர்க்கரை ஆலை முன் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .இப்போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என நேற்று இரவு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் கும்பகோணத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இப்பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டாததால் கரும்பு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 14வது நாள் போராட்டமாக தலையில் முக்காடு போட்டு விவசாயிகள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் . மழை பெய்த போதிலும் விவசாயிகளின் தொடர் காத்திருப்பு போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.