விதியைமீறிய மருத்துவமனைகளுக்கு சீல்…! சுகாதாரத்துறை அதிரடி..
விதிமுறைகளை பின்பற்றாத தனியார் மருத்துவ மனையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தடை விதித்து சுகாதர துறை அதிரடி..
ஸ்கேன் மையம் சீல் வைப்பு.. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே இயங்கி வரும் கோகிலா சேகர் நர்சிங் ஹோம் என்ற தனியார் மருத்துவமனையில் பிரசவத்திற்காக வரும் பெண்கள் அதிக அளவு உயிரிழப்பதாகவும் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பதாகவும் மாவட்ட நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன..
மருத்துவமனையில் இறப்பு விகிதம் அதிகமாக இருப்பது குறித்து மருத்துவ குழுவினர் ஆய்வு நடத்தினர். இதில் சில குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, ஈரோடு மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் பிரேமகுமாரி தலைமையிலான அதிகாரிகள் இன்று மருத்துவமனையில் ஆய்வு நடத்தினர்.
இந்த ஆய்வின் போது 12 படுக்கைகளுக்கு நோயாளிகளுக்கு மட்டுமே அனுமதி பெற்று 28 நோயாளிகளுடன் மருத்துவமனை இயங்கி வந்ததும், காலாவதியான மயக்க மருந்து பயன்படுத்தியதும் தெரிய வந்தது.
மேலும் அறுவை அரங்கில் பயன்படுத்தும் கையுறை, நோயாளிகளுக்கு பயன்படுத்தும் சிறுநீரக டியூப் ஆகியவை சுகாதாரமற்ற முறையில் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து 15 நாட்களுக்கு உள் மற்றும் வெளி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தடை விதித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும் உடனடியாக மருத்துவமனையில் உள்ள நோயாளிகளை டிஸ்சார்ஜ் செய்யவும் உத்தரவிட்டு உள்ளனர். மருத்துவமனை நிர்வாகத்தின் குறைபாடுகள் குறித்து 15 நாட்களுக்குள் எழுத்துப்பூர்வமான விளக்கம் அளிக்கவும் உத்தரவிட்டு உள்ளனர் மேலும் மருத்துவமனையில் ஸ்கேன் மையத்திற்கும் ஸ்கேன் இயந்திரத்திற்கும் சீல் வைத்துள்ளனர்..