கலகலப்பு கஃபே! – பாலிடிக்ஸ் கார்னர்
“என்ன மொசக்குட்டி… ஆளையே காணல… அண்ணாமலை அமெரிக்கா போன மாதிரி நீயும் எதாவது படிக்கிறதுக்காக அமெரிக்கா ஆஸ்திரேலியான்னு போயிட்டியோன்னு நினைச்சேன்!”
“அதென்ன சித்தப்பு… அண்ணாமலைக்கு திடீர்னு எதோ படிப்பு… ஃபெல்லோஷிப்னு எதெதோ சொல்றாங்க?”
“அடேய்… ஊருக்குள்ள பெரிய மனுஷன்னு பெயரெடுக்கணும்னா என்னத்தையாவது படிக்கிற மாதிரி காட்டிக்கணும்… அமெரிக்கா ஆப்ரிக்கான்னு நாலு நாடுகளுக்கு போகணும்… அப்போ தான்டா இந்த உலகம் நம்மள உத்து பார்க்கும்!”
“ஓ… அதான் நம்ம பிரதமர் அடிக்கடி டூர் அடிச்சுக்கிட்டே இருக்காரா சித்தப்பு?”
“ஆமான்டா மொசக்குட்டி… நம்ம வீட்டுலயே எடுத்துக்கோயேன்… யாராவது வீட்டுக்கு வந்து, உங்கப்பா எங்கன்னு கேட்டால், அவரு ஆபீசுக்கு போயிருக்காரு… அவரு கம்பெனிக்கு போயிருக்காரு… பேக்டரிக்கு போயிருக்காரு… சாயங்காலம் தான் வீட்டுக்கு வருவாரு… அப்டீன்னு சொன்னாத்தான கெத்தா இருக்கும்! அதுமாதிரி தான்டா!”
“அதும் சரிதான் சித்தப்பு… அதும் பிரதமரே அடிக்கடி வெளிநாட்டு டூர் போறப்ப, அவரோட கட்சியோட மாநில தலைவரும் ஒரு வெளிநாட்டுக்காவது விசிட் அடிச்சாத்தான கெத்தா இருக்கும்!”
“ஆமான்டா மொசக்குட்டி… அமெரிக்காவுக்கே போனாலும் அங்கயும் ஒரு வீடியோ டீம் வச்சு தன்னை விளம்பரப்படுத்துனாரு பாரு… அங்க தான்டா நிக்கிறாரு நம்ம அண்ணாமலை!”
“அதென்ன விளம்பரம் சித்தப்பு?”
“அவரு ஒரு மீட்டிங்ல பேசுறதுக்காக ஸ்டேஜ்ல உக்காரப் போவாரு… அப்போ அங்கருக்க சேர்களில் அவருக்கு மட்டும் மாப்பிள்ளை சேர் மாதிரி போட்டிருப்பாங்க… உடனே அவரு அந்த சேரை தூக்கச் சொல்லிட்டு சாதா சேரையே போடச்சொல்லுவாரு!”
“அட… ரொம்ப சிம்ப்ளிசிட்டின்னு காட்டிக்கிறதோ! நம்ம மோடியும் இப்டித்தான் சித்தப்பு காட்டுவாரு… அதையே அண்ணாமலையும் ஃபாலோ பண்றாரு போல!”
“அண்ணாமலை ஒரு பக்கம் பரபரப்பு காட்டுனா… நம்ம நிதியமைச்சர் நிர்மலா மேடம் வாஷிங்டன்ல ஒரு மீட்டிங்ல கலந்துக்கிட்டு பரபரப்பு காட்டிட்டாங்க! சொல்லப்போனால் பெரிய பீதியவே கிளப்பிட்டாங்க!”
“அதென்ன சித்தப்பு?”
“இந்திய பொருளாதாரத்துக்கு எக்கச்சக்கமான சவால்கள் இருக்குது… எரிபொருள், மின்சாரம், உரத்தின் விலை உயர்வு மட்டுமின்றி, அவை கிடைப்பதிலும் சிரமம் உள்ளதாக ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். நாட்டில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உள்ளதுன்னு ஒரு குண்டை தூக்கிப் போட்டுட்டாங்க!”
“க்கும்… அவங்க என்னைக்கு ஆட்சிக்கு வந்தாங்களோ, அன்னைலருந்து நமக்கு சவால் தான சித்தப்பு! ஆனால் ஒண்ணு சித்தப்பு… என்னதான் உணவுப் பற்றாக்குறை வந்தாலும், கோவில்களில் பிரசாதம் வழங்கும் இந்துக்களின் காவலர் மோடிஜி வாழ்கன்னு அப்பவும் ஒரு குரூப் அவரை தூக்கிக் கொண்டாடிட்டு தான் இருக்கும்!”
“மூளைச்சலவை அந்த அளவுக்கு பண்ணியிருக்காய்ங்க மொசக்குட்டி… இப்பக்கூட ஒரு கிராமத்துல போலீஸ் அதிரடி சோதனை போட்டப்ப, அங்கருக்க தரைக்கு அடியில சாராய பேரல்களை புதைச்சு வச்சு, அதுக்கு மேல அடிபம்ப்பு செட் பண்ணி, அடிபம்ப்புல தண்ணிக்கு அடிச்சால் அதுல சாராயம் வர்ற மாதிரி செட் பண்ணியிருந்ததை போலீஸ் கண்டுபுடிச்சுட்டாங்க!”
“அடக்கொடுமையே! ஏற்கெனவே கலகலப்பு படத்துல சந்தானம் பண்ணுன காமெடி மேட்டர் தான அது? அதை நிஜத்துலயே பண்ணிட்டாய்ங்களா?!”
“ஆமான்டா மொசக்குட்டி! இதுல என்னன்னா, இந்த போட்டோவை போட்டு… இது தான் திராவிட மாடல்னு பாஜகவோட நாராயணன் திருப்பதிலருந்து பல பேர் தமிழ்நாடு அரசை கிண்டலடிச்சிருக்காங்க… கடைசியில பார்த்தால் அந்த கிராமம் இருக்குறது மத்திய பிரதேசத்துல… அந்த மத்திய பிரதேசத்துல ஆட்சியில இருக்குறது பாஜக ஆட்சி! ஆக, அது எந்த மாநிலம்… யார் ஆட்சின்னு கூட பார்க்காமல் கண்ண மூடிக்கிட்டு தமிழ்நாடு அரசை கிண்டல் பண்றது வழக்கமாயிடுச்சு!”
“ஆமா சித்தப்பு… இதேபோல எந்த பத்திரிகையாளர்கள் கூட்டமா இருந்தாலும் உடனே பத்திரிகையாளர்களை மோசமா பேசுறது… ஆன்ட்டி இந்தியன்னு பேசுறதெல்லாம் ஹெச்.ராஜா, அண்ணாமலைக்கு சகஜமான விஷயம்… அப்டித்தான் ஒரு சந்திப்புல பத்திரிகையாளர்களை கல்வியறிவே இல்லாதவங்கன்னு கிண்டலா பேசியதோடு, தமிழில் பல்வேறு இலக்கியம் சார்ந்த நூல்களை எழுதிய இராபர்ட் கால்டுவெல்லை மிக மோசமாக, புனை சுருட்டு எழுத்தாளர்னு ஹெச்.ராஜா சொன்னார்… அதுக்கு உடனே ஒரு நிருபர், “மகாபாரதம் மாதிரி புனைவா?”ன்னு தான் கேட்டார். உடனே ஹெச்.ராஜாவுக்கு ஷாக்காயிடுச்சு! பத்திரிகையாளர்களை கடுமையா திட்டியதோட, கெட் அவுட்னும் கத்திட்டு, அவரே வெளிநடப்பு பண்ணிட்டார்!”
“ஓ.. இதுதான் ‘என்னைச் சொன்னேன்!” கெட்டவுட்டா?! ஹஹஹஹ்!”
-புத்தன்