இந்தியாவில் உணவு பற்றாக்குறை ஏற்படும் அபாயம் உண்டு? – ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
சர்வதேச நாணய நிதியம்(IMF) மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டத்தில் பங்கேற்பதற்காக 6 நாள் அரசு முறை பயணமாக நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார்.
வாஷிங்டன் டிசி நகரில் உள்ள ப்ரூக்கிங் இன்ஸ்டியூட்டில் நடந்த கூட்டத்தில் பொருளாதார வல்லுநர் ஈஸ்வர் பிரசாத் அடுத்த ஆண்டிற்கான இந்திய பட்ஜெட் குறித்து எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியது , “இப்போதுள்ள நிலையில் அடுத்த ஆண்டு பட்ஜெட் தயாரிப்பு மிகக் கடினமானதாக இருக்கும். ஆனால் அதை இப்போதே எப்படி இருக்கும் என்பதை கணிக்க முடியாது. நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்தும் காரணிகளுக்குத்தான் அதிகமான முக்கியத்துவம் வழங்கப்படும். பணவீக்கம் எனக்கு பல்வேறு கவலைகளை ஏற்படுத்தினாலும், அதை சரி செய்து குறைக்க வேண்டிய கடமை இருக்கிறது. ஆனால், பணவீக்கத்தை வைத்துக்கொண்டு பொருளாதார வளர்ச்சியை பராமரிப்பது என்பது இயல்பாக எழும் கேள்விதான். மேலும், இந்திய பொருளாதாரம் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகிறது.எரிபொருள், மின்சாரம், உரத்தின் விலை உயர்வு மட்டுமின்றி, அவை கிடைப்பதிலும் சற்று சிரமகவே உள்ளது. இதன் விளைவாக இந்திய நாட்டில் சில பகுதிகளில் உணவு பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் அடுத்த ஆண்டு பட்ஜெட், நாட்டின் வளர்ச்சி வேகத்தைத் அதிகரிக்கும் வகையில் கட்டமைக்கப்படும்.” என்று தெரிவித்தார்.