காப்பகத்தின் மெத்தனபோக்கே குழந்தைகள் உயிரிழப்புக்கு காரணம் – அமைச்சர் கீதா ஜீவன்

திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா சேவாலயத்தில் 15 குழந்தைகள் தங்கி அம்மாபாளையம் அரசு பள்ளியில் கல்வி பயின்று வந்தனர். பள்ளி சென்று வந்த பிறகு காப்பகத்திலேயே தங்கி உள்ள அவர்களுக்கு அங்கேயே உணவு சமைக்கப்பட்டு வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ரச சாதம் சாப்பிட்ட குழந்தைகள் மயக்கமடைந்துள்ளனர். நேற்று காலை காப்பகத்தின் ஊழியர்கள் சென்று பார்த்தபோது இரண்டு சிறுவர்கள் காப்பக வளாகத்திலேயே உயிரிழந்துள்ளனர். மீதமுள்ள சிறுவர்கள் மயக்க நிலையில் இருந்துள்ளனர். அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த நிலையில் மேலும் ஒரு சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் உயரிழந்துள்ளனர். 

மூன்று சிறுவர்கள் உயிரிழந்த நிலையில் 11 பேர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர் . தமிழக அரசு சார்பில் மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசன் தலைமையில் ஒரு கமிட்டி அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது . மேலும் சமூகநலத்துறை இயக்குனர் வளர்மதி தலைமையிலும் விசாரணை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. 

சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் திருமுருகன்பூண்டி பகுதியில் உள்ள விவேகானந்தா சேவாலய காப்பகத்தில் இன்று நேரில் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்பு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் திருப்பூர் திருமுருகன்பூண்டி  பகுதியில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா சேவாலயத்தில் நடந்த இந்நிகழ்வு மிகவும் வருத்தத்துக்குரியது எனவும், ஆதரவற்ற குழந்தைகளுக்கு நேர்ந்த நிலைமையை கண்டு தமிழக முதல்வர் வருத்தம் அடைந்ததாகவும், உடனடியாக கமிட்டி அமைத்து விசாரிக்க உத்தரவு விட்டதோடு தன்னையும் நேரில் சென்று விசாரிக்க கூறினார் எனவும் தெரிவித்தார்.  

நேரில் வந்து ஆய்வு மேற்கொண்ட போது காப்பகத்தில் சிறுவர்கள் தங்குவதற்கான போதுமான வசதிகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதாகவும் சிறுவர்களை இரவு நேரத்தில் பாதுகாக்க காப்பாளரை ஊழியர்கள் யாரும் நியமிக்கப்படவில்லை என்பது தெரிய வருகின்றது எனவும், 

தனியார் காப்பக நிர்வாகத்தின் அஜாக்கிரதை மற்றும் மெத்தனபோக்கின் காரணமாகவே உயிர் இழப்பு நிகழ்ந்திருப்பதாகவும் உடனடியாக ஸ்ரீ விவேகானந்தா சேவாலயத்தை மூட உத்தரவு பிறப்பிக்கப்படுவதாகவும் , அங்கு பயின்ற சிறுவர்கள் ஈரோட்டில் உள்ள அரசு காப்பகத்தில் சேர்க்கப்பட்டு அரசின் கண்காணிப்பில் பாதுகாக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்தார். 

மேலும் ஸ்ரீ விவேகானந்த சேவாலய காப்பக நிர்வாகி மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் திருப்பூரில் உள்ள 13 காப்பகங்களும் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.  கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குழந்தைகள் நல குழும அதிகாரிகள் காப்பகத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர் 

ஆனால் தொடர் ஆய்வு மேற்கொள்ளாத நிலையில் அவர்கள் மீதும் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இது போன்ற காப்பகங்கள் வெளியில் இருந்து வழங்கும் உணவுகளை வாங்கக்கூடாது என்பது தமிழக அரசின் விதிமுறைகள் உள்ளதாகவும் ஆனால் அதையும் மீறி செயல்பட்டு இருப்பதாகவும் தமிழக அரசு அமைத்த குழுக்களின் விசாரணை நிறைவில் சட்டப்படியான நடவடிக்கை உறுதியாக மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். 

இந்த ஆய்வின் போது மாநில செய்திதுறை அமைச்சர் சாமிநாதன், தமிழக அரசால் நியமிக்கப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரியான மணிவாசன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *