5G நெட்வொர்க்கால் இவ்வளவு பாதிப்பா? நீதிமன்றம் சென்ற கிராம மக்கள்
ஸ்ரீவில்லிபுத்தூரில் 33வது வார்டு பகுதியில் செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில் பகுதியில் நகராட்சிக்கு உட்பட்ட 33 வது வார்டில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் தனிநபருக்கு சொந்தமான இடத்தில் செல்போன் டவர் அமைக்க குழி தோண்டப்பட்டு வந்த நிலையில் அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வந்தனர்.
மேலும் குடியிருப்பு பகுதிக்குள் அதிக அலைகாற்றுடன் 5G நெட்வொர்க் டவர் அமைக்கப்படுவதால் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள்,குடியிருப்புவாசிகள் பாதிக்கப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்படும் நிலை உருவாகும் என்று அச்சம் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து செல்போன் டவர் அமைக்காமல் இருக்க அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அப்பகுதிமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பின்னர் குடியிருப்பு வாசிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்நிலையில் செல்போன் டவர் அமைக்கும் பணியை துவங்கியுள்ளனர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக செல்போன் டவர் அமைப்பதை தடுத்து நிறுத்த வேண்டும் குடியிருப்பு வாசிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.