சபாஷ்: தீண்டாமை சுவரை இடித்து தரைமட்டமாக்கிய வருவாய்த்துறை
ஆரம்பாக்கம் அருகே பட்டியலின மக்களை பாதிப்பதாக எழுந்த புகாரில் தீண்டாமை சுவர் இடிப்பு. திருவள்ளூர் மாவட்டம் ஆரம்பாக்கம் அடுத்த தோக்கமூர் கிராமத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
கூலி தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்த கிராமத்தில் திரௌபதி அம்மன் ஆலயத்தின் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் மதிற்சுவர் ஒன்று பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இந்த சுவர் கட்டப்பட்டதால் பட்டியலின மக்கள் கால்நடை மேய்ச்சலுக்கு, கூலி தொழிலுக்கு அந்த வழியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டிருப்பதாக புகார் தெரிவித்தனர்.
பட்டியலின மக்களை பாதிக்கும் வகையில் எழுப்பப்பட்டுள்ள தீண்டாமை சுவரை இடித்து அகற்ற வேண்டும் என்று அப்பகுதி மக்களும் பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் இன்று அதிகாலையில் சுமார் 100க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்புடன் 5ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் மதிற்சுவரை வருவாய்த்துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர். அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க தொடர்ந்து கிராமத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.