பாதுகாப்பு கேட்டு பாய், தலையணையுடன் பட்டியலின மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டம்

சேலம் அருகே பெரிய சோரகையை சேர்ந்த  50 க்கும் மேற்பட்ட அருந்ததிய குடும்பத்தினர் பாய், தலையணை , பிளாஸ்டிக் குடங்களுடன் வந்து   ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட  முயன்றதால் பரபரப்பு. காவல்துறையினர் தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

சேலம் மாவட்டம்,  தாரமங்கலம்  அருகே பெரியசோரகை பகுதியில்  50 க்கும் தாழ்த்தப்பட்ட  குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இலவச  வீட்டு மனை கேட்டு  அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தனர். இந்த நிலையில் நங்கவள்ளி பகுதியில் நிலம் தேர்வு செய்யப்பட்டு ,  அளவீடு செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்ட போது அங்கு வசிக்கும் மக்கள், அருந்ததியர் மக்கள் குடியேறுவதற்கும், அங்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்குவதற்கும் கடும்  எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனால் அரசு சார்பில் அருந்ததியர் மக்களுக்கு நிலம் வாங்க முடியாத நிலை ஏற்பட்டது.  

இந்த நிலையில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும்  பாதுகாப்பு கேட்டு தங்கள் குழந்தைகளுடன் பாய், தலையணை, அடுப்பு , விறகு  உள்ளிட்ட பொருட்களுடன்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக வந்தனர். 

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர்.  அப்போது தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் இல்லையேல் இங்கிருந்து நகர மாட்டோம் என தெரிவித்தனர்.

மேலும் தங்களுக்காக நங்கவள்ளி அருகே சீரகனூர் பகுதியில் அரசு அதிகாரிகள் தேர்வு செய்துள்ள இடத்தை , மாற்று சமூகத்தினர் கொடுக்கவிடாமல் தடுத்து  வருவதாக குற்றம்சாட்டிய அவர்கள்,  தங்களுக்கு குடியிருக்க வீட்டுமனை பட்டா உடனே வழங்க வேண்டும் என கோரி இன்று பாய் தலையுடன் போராட்டத்தில் ஈடுபட வந்ததாக தெரிவித்தனர்.  எங்களுக்கு பட்டா வழங்கும் வரை இடத்தை விட்டு செல்லமாட்டோம் என கூறினர். மேலும் தங்கள்  உயிருக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் , வாழ்வதற்கு தேவையான பட்டா நிலம் வழங்க வேண்டும் எனவும்  தெரிவித்தனர் .

இதனையடுத்து காவல்துறையினர் சம்பந்தப்பட்ட  அதிகாரியிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததை அடுத்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *