அடிதூள்: நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க 250 கோடி மேற்கூரைகள் முதல்வர் அறிவிப்பு
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகள் மழையில் நனையாமல் இருக்க தஞ்சை உள்ளிட்ட 20 இடங்களில் 250 கோடி ரூபாய் நிதியில் இரும்பிலான மேற்கூரைகள் அமைத்திட முதல்வர் நடவடிக்கை, நெல்லின் ஈரப்பதத்தை 21 சதவிகிதமாக உயர்த்துவது தொடர்பாக ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதி ஒப்புதல் பெறப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி
தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் திறந்தவெளி நெல் சேமிப்பு கிடங்கனை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று ஆய்வு செய்தார். மேலும் அங்கு மேற்கூரையுடன் கட்டப்பட்டு வரும் நிரந்தர சேமிப்பு கிடங்கினையும் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு சந்திப்பில்,
மூன்று லட்சம் மெட்ரிக் டன் நெல்லை சேமித்து வைப்பதற்கான மேற்கூரையுடன் கூடிய நிரந்தர குடோன்கள் சுமார் 250 கோடி ரூபாயில் கட்டப்பட்டு வருவதாகவும், இருபது இடங்களில் நடைபெறும் இந்த பணிகள் வரும் அக்டோபர் 31ஆம் தேதிக்குள் நிறைவடையும் என தெரிவித்தார்.
மேலும் ஒன்றிய அரசின் சேமிப்பு கிடங்கு, நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்கு என அனைத்தும் சேர்த்து 11 லட்சம் மெட்ரிக் டன் நெல்மணிகளை சேமித்து வைக்க முடியும் என்றவர், இதன் மூலம் திறந்தவெளியில் நெல் சேமித்து வைக்கக்கூடிய சூழ்நிலை ஏற்படாது என தெரிவித்தார்
மேலும் தமிழகத்தில் தனியார் பங்களிப்புடன் 13 நவீன அரிசி அரவை ஆலைகள் தொடங்கப்பட உள்ளது. இதன் மூலம் தினமும் 6,800 மெட்ரிக் டன் நெல் அரவை செய்யப்படும் என தெரிவித்தார். கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 372 அரிசி அரவை ஆலைகள் மட்டுமே செயல்பட்டதாகவும் ஆனால் தி.மு.க ஆட்சி ஏற்பட்ட பிறகு 660 அரிசி ஆலைகள் உள்ளதாகவும் கூறிய அமைச்சர்,
ரேஷன் கடைகள் மூலம் அரிசி மக்களுக்கு வழங்கக்கூடிய அரிசி கருப்பு – பழுப்பு இல்லாமல் வழங்குவதற்கான பணிகளும் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். தற்போது குறுவை சாகுபடி கொள்முதல் நடைபெற்று வருவதாகவும், விவசாயிகள் 21% நெல்லின் ஈரப்பதம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இது மாநில அரசு மட்டும் எடுக்கக்கூடிய நடவடிக்கை இல்லை,
இது குறித்து ஒன்றிய அரசிடம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அவர்கள் குழு அமைத்து இங்கு வந்து ஆய்வு செய்து பிறகு, நெல்லின் ஈரப்பதம் உயர்த்துவது தொடர்பான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.