பாட்டில்களில் பெட்ரோல் விற்பனை தடையை நீக்க விவசாயிகள் கோரிக்கை
தமிழகம் முழுவதும் பாட்டில்கள், பிளாஸ்டிக் கேன்களில் பெட்ரோல் , டீசல் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதால் விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே தமிழக அரசு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவாமழையை நம்பி சம்பா நடவு பணிகள் தொடங்கியுள்ளது. சிவகங்கை மாவட்டம் மானாமதுரை மற்றும் திருப்புவனம் வட்டாரத்தில் பருவ மழை மற்றும் வைகை ஆற்று பாசனத்தை நம்பி சுமார் 8 ஆயிரம் ஹெக்டேரில் நெல் நடவு பணிகள் தொடங்கியுள்ளன.
மோட்டார் பாசன விவசாயிகள் பலரும் நாற்றங்கால் அமைத்து நடவு பணிகள் தொடங்கியுள்ள நிலையில் பெட்ரோல் விற்பனை மையங்களில் பாட்டில்களில் பெட்ரோல், டீசல் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டதால் பணிகள் பாதிக்கப்படடுள்ளன. கிராமங்களில் டிராக்டர்கள், பவர் டில்லர்கள், மருந்து தெளிக்கும் ஸ்பிரேயர்கள், டீசல் என்ஜின்கள் வைத்துதான் பணிகள் நடைபெறும்,
இதில் டிராக்டர் தவிர மற்ற வாகனங்களின் பெட்ரோல், டீசல் டேங்குகள் சிறிதானவை, மேலும் அவைகளை சாலைகளில் இயக்க முடியாது, பிளாஸ்டிக் கேன்கள், பாட்டில்களில் வாங்கி வந்துதான் இயக்க முடியும் ஒட்டு மொத்தமாக தடை விதிக்கப்பட்டதால் கடந்த மூன்று நாட்களாக விவசாய பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. உழவு பணி டிராக்டர்கள் அனைத்தும் ஒரங்கட்டப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன.
டிராக்டர்களில் டீசல் டேங்குகள் 60 லிட்டர் கொள்ளவு கொண்டவை, 60லிட்டர் நிரப்பினால் மூன்று ஏக்கர் உழவு செய்ய முடியும், மீண்டும் பெட்ரோல் விற்பனை மையம் சென்று நிரப்பி வர குறைந்த பட்சம் 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை செலவாகும், என்பதால் விவசாயிகள் பணிகளை நிறுத்தி விட்டு காத்திருக்கின்றனர்.
விவசாயிகள் பெட்ரோல் நிலையங்களில் மொத்தமாக 50 லிட்ர், 100லிட்டர் என வாங்கி வந்து இருப்பு வைத்து டிராக்டரை இயக்குவார்கள், தடை உத்தராவல் விற்பனை நிலையங்களில் டீசல், பெட்ரோல் தர மறுத்து வருகின்றனர். எனவே விவசாய பணிகளுக்கு தளர்வு அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.