#Breaking சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; சித்தி உட்பட 8 பேருக்கு ஆயுள்; 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை!

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் 22 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், பின்னர் அது 26 ஆக மாற்றப்பட்டது. இதில் 4 பேர் தலைமறைவாக இருந்ததால், மீதமிருந்த 22 பேர் மீதான வழக்கை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்தது.

இதில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவர் இறந்துவிட்டதால் 21 பேர் மீதான வழக்கை நீதிபதி ராஜலட்சுமி வழக்கை விசாரித்து வந்தார். கடந்த வாரம் 21 பேரும் குற்றவாளிகள் என அறிவித்த நீதிபதி இன்று தண்டனை விவரங்களை அறிவித்துள்ளார்.

அதன்படி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக சிறுமியின் சித்தி, சித்தப்பா உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். இதில் 6 பேர் பெண்கள் ஆவர். மீதமுள்ள 13 பேருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இதில் காவல் ஆய்வாளர், உணவு பொருள் வழங்கல் துறை அதிகாரி, பாஜக பிரமுகர், தனியார் தொலைக்காட்சியைச் சேர்ந்த ஊழியர் உள்ளிட்ட 13 பேர் அடங்குவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *