கலகலப்பு கஃபே — பாலிடிக்ஸ் கார்னர்
“என்ன சித்தப்பு… முகம் ரொம்ப ஷைனிங்கா இருக்கே… என்ன விஷயம்?”
“ஒண்ணுமில்லடா மொசக்குட்டி!”
“யோவ் சித்தப்பு… எங்கிட்டயே மறைக்கிறியா? அதான் தெரியுதே… முகத்துல பளிச்சுன்னு…”
“அதில்லடா… நேத்திக்கு ஒரு செய்தி பார்த்தேன்… கணவனோட காதலைப் பற்றி தெரிஞ்சுக்கிட்ட மனைவி, அவனை அவனோட எக்ஸ் லவ்வர் கூடவே சேர்த்து வச்சு, கல்யாணமே பண்ணி வச்சுட்டாளாம்! ஆச்சர்யமா இருக்குல்ல!”
“அட… ஆமா சித்தப்பு… அதுசரி, அந்த செய்தியைப் படிச்சுட்டு உனக்கு என்ன நெனப்பு? அதும் கல்யாணமாகி 20 வருஷத்துக்கு அப்புறம்?”
“அதில்லடா… நம்ம வாழ்க்கையிலயும் இப்டி நடந்திருந்தா நல்லாருக்குமேன்னு நெனச்சேன்…”
“யோவ் சித்தப்பு… ஏற்கெனவே உங்க வீட்டுக்காரம்மா வாழ்க்கைய காலி பண்ணிட்ட… உன்னைய கட்டிக்கிட்டு அது படுற பாடே பெருசு… இதுல இன்னொருத்திய வேறவா… அந்த பொம்பளயாவது நல்லாருக்கட்டும் சித்தப்பு!”
“சரிசரி… விடுறா… நம்ம அதிமுக வெவகாரம் எந்த அளவுல இருக்குதுடா?”
“அது எங்க… இன்னும் இழுத்துக்கிட்டுத்தான் இருக்கு,… அதான் திரும்ப அமித்ஷாவ எடப்பாடி, வேலுமணி, சி.வி.சண்முகம்லாம் போயி சந்திச்சுப் பேசியிருக்காங்க!”
“ஆ..ஊ…ன்னா டெல்லிக்கே போறாங்களே மொசக்குட்டி… அதிமுக தலைமை என்ன தமிழ்நாட்டுல இருக்கா? டெல்லியில இருக்கா?”
“இப்டி எல்லாரும் நக்கலா கேக்குறதாலதான் நாங்க எங்களுக்காக அமித்ஷாவ பார்க்கல… தமிழ்நாட்டுல போதைப்பொருள் பயன்பாடு அதிகமா இருக்கு, அதைக் கட்டுப்படுத்தணும்னு புகாரளிக்கத்தான் அமித்ஷாவை சந்திச்சோம்னு சொன்னாங்க சித்தப்பு…”
“இதுக்கும் ஏகப்பட்ட மீம்ஸ் பறந்திருக்கு போல…”
“ஆமா சித்தப்பு… போதைப்பொருள் அதிகமா புழங்குதுன்னு சொன்னதுக்கும், சி.வி.சண்முகத்துக்கும் முடிச்சுப்போட்டு திமுக சைடு ஆளுங்க மீம்ஸ் பண்ணிட்டாய்ங்க…”
“இப்பல்லாம் இந்த மீம்ஸ் பார்ட்டிங்க தொல்லை ஓவரா போகுதுடா மொசக்குட்டி…”
“ஆமா சித்தப்பு… இங்கிலாந்து ராணி எலிசபெத் மரணத்தைக்கூட இவனுங்க விட்டு வைக்கல…. அதுக்கு நம்ம சீமான் அஞ்சலி செலுத்தி போஸ்டர் ஒட்டுன மாதிரி மீம்ஸ் ரெடி பண்ணிட்டாய்ங்க! ஹஹஹ!”
“போஸ்டர்னு சொன்னதும் தான் நினைவுக்கு வருது… நம்ம சிலுக்கு ஸ்மிதாவுக்கு இப்பத்தான் 27வது நினைவு தினம் வந்திருக்கு… அதுக்கு போஸ்டர்லாம் ஒட்டி நினைவு அஞ்சலி செலுத்தியிருக்காங்க பாத்தியா?”
“க்கும்… எல்லாம் உன்ன மாதிரி பெருசுங்க பண்ற வேலை தான… அவங்க நல்லா நடிச்சுக்கிட்டிருந்த காலத்துல கனவுக்கன்னி… கவர்ச்சி நடிகைன்னு ஒதுக்கி வச்சுட்டு… அவங்க போய்ச்சேர்ந்த பிறகு, அவளைப்போல அழகி உண்டான்னு அவங்களப்பத்தி பெருமை பேசிட்டு இருக்கீங்க!”
“டேய் மொசக்குட்டி… நம்ம அண்ணாமலை பத்தி எதாவது விஷயம் இருந்தா சொல்லு… அவர் எதோ வீடியோ விட்டிருக்காராமே?”
“ஆமா சித்தப்பு… மனு நீதியப் பத்தி புகழ்ந்து, அந்தந்த சமூகத்து மக்கள் அந்தந்த சமூகத்துக்கான வேலையைத்தான் பண்ணணும்… அந்தந்த ஜாதிக்கான வேலையைத்தான் பண்ணணும்னு வீடியோல பேசுனதுதான் வைரலாகியிருக்கு… இதே ஆளு, தமிழ்நாட்டுல சட்டம் ஒழுங்கு சரியில்ல… ஜாதிப்பிரச்சனை அதிகமா இருக்குன்னும் சொல்லியிருக்காரு!”
“ஓ… இதுதான் பிள்ளைய கிள்ளி விட்டு, தொட்டில ஆட்டுறதா? அதுசரி, இவரு ஜாதிக்கு மனுநீதியில என்ன வேலை செய்யணும்னு சொல்லியிருக்காம்? ஐ.பி.எஸ். வேலையா? ஆடு வளர்க்குறதா? இல்ல கட்சித்தலைவர் போஸ்ட்டிங்கா? இவரே முதலில் ஒரு வேலைல உருப்படியா இல்ல… திரும்பவும் அந்தக்காலத்துக்குக்கு மக்களை கொண்டுபோகப் பாக்குறாரா?”
“ஆமா சித்தப்பு… அதும் ஒரு சி.பி.எஸ்.சி. பாடத்திட்டத்துல சனாதன தர்மம்னு சொல்லி ஒரு பக்கத்துல நாலு வர்ணங்களையும் விளக்கி ஒரு பாடத்தையே வச்சிருக்காங்க.. அதுல சூத்திரர்கள்னு போட்டு கோவணத்தோட படம் போட்டிருக்காங்க… பிராமணர்களுக்கு மத்தவங்க அடிமையாக இருக்கணும்னு சொல்லியிருக்காங்க”
“அடக்கொடுமையே… இதனாலதான இந்த மனுநீதிய ஒரு குரூப் மட்டும் தூக்கிட்டு திரியிறாங்க…”
“ஆமா சித்தப்பு… இந்தந்த ஜாதியில பிறந்தவங்களுக்கு இந்தந்த பதவின்னு சொல்லிட்டா இனிமேல் மத்தவங்க படிக்கவோ, பரிச்சை எழுதவோ தேவையில்ல போல!”
“அதான… உன்னோட புத்தி பரிட்சை எழுதாம டிமிக்கி குடுக்குறதுல தான இருக்கும்! அப்டியெல்லாம் உன்னைய விட்டுட முடியாது… ஒழுங்கா படிச்சு உருப்படுற வழியப்பாரு!”
“அப்போ உன்னோட சகவாசத்தத்தான் முதலில் கட் பண்ணணும் சித்தப்பு! ஹஹஹஹ!”
-புத்தன்