கேரளாவைப் போல டி.என்.பி.எஸ்.சி விதிகளில் திருத்தம் வேண்டும்.
பணியாளர் தேர்வாணையத் தேர்வுகளில் வெற்றி பெறுபவர்கள், காலியிடங்கள் அதிகரிக்கும்பட்சத்தில் அதில் நியமிக்கப்படுகின்றனர். அதேபோல் தமிழகத்திலும் விதிகளில் திருத்தம் செய்து வேலைவாய்ப்பை வழங்கிட வேண்டும்.
தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் முன்னாள் செயலாளரும், தமிழ் நாடு கால்நடை மருத்துவர்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர்.பாலாஜி நாமக்கல்லில், தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் முன்னாள் செயலாளரும் கால்நடை மருத்துவர்கள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளருமான மருத்துவர் எம்.பாலாஜி இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
அரசுப் பணியாளர் தேர்வாணையம் நியமனங்கள் தொடர்பான வழக்குகள், கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட தவறான நியமன நடைமுறைகளால் ஏற்பட்டுள்ளது என்பதை தற்போதைய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
கேரள அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தகுதி பட்டியலுக்கான செல்லுபடி காலத்தை மூன்று ஆண்டுகள் என வகுத்துள்ளது. முதலாவது பட்டியலை நிரப்பிய பிறகு, மீதமுள்ள தகுதியானவர்களை காலிப்பணியிடங்கள் ஏற்படும்போது அதில் நியமிக்கும் நடைமுறை அமலில் உள்ளது. இதனால் அவர்கள் மீண்டும், மீண்டும் தேர்வு எழுத வேண்டிய நெருக்கடி இல்லை.
ஆனால், தமிழகத்தில் அரசுத் துறைகளில் குறிப்பிட்ட பணிகளுக்கான காலியிடங்கள் மற்றும் தகுதிப் பட்டியலில் தகுதியானவர்கள் இருந்தபோதும் அவர்களைக் கொண்டு மீதமுள்ள காலியிடங்களை நிரப்பாமல் புதிய பணி நியமனத்தை நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிட்டு வருவது வாடிக்கையாக உள்ளது.
கால்நடைத் துறையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு மருத்துவப் பட்டதாரிகளுக்கு எவ்வித தேர்வுமின்றி, உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கால்நடை உதவி மருத்துவர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
மேலும், பெண்களுக்கு 31 சதவீத இட ஒதுக்கீட்டின்படி அரசுத் துறைகளில் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. இவை தவிர 69 சதவீத பொது இட ஒதுக்கீட்டிலும் பெண்களுக்கான ஒதுக்கீடு முறை உள்ளது. இதனால் தேர்வில் வெற்றி பெற்ற ஆண்களுக்கு வேலைவாய்ப்பு பறிபோகும் சூழல் எழுந்தது. அண்மையில் சென்னை உயர்நீதிமன்றம் பொது வேலைவாய்ப்பில் சம உரிமை என்று அளித்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சி வரவேற்கிறது. இதனை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.