கோவில் திருவிழாவில் குறிப்பிட்ட சமூகத்தினருக்கு தடை; நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!
சிவகங்கை மாவட்டம் இலுப்பக்குடி கிராமத்தில் குறிப்பிட்ட சமூகத்தினரை தவிர்த்து கோவில் திருவிழா நடத்தப்படுவதாக வழக்கு. திருவிழாவில் அனைத்து தரப்பினரும் பங்கேற்று ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டும், எந்த சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படுத்தக் கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
சிவகங்கை மாவட்டம் இழுப்பக்குடி கிராமத்தைச் சேர்ந்த வேலு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு. சிவகங்கை மாவட்டம் இழுப்பக்குடி கிராமத்தில் அய்யனார் கோவில் புறவி எடுப்பு திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த திருவிழாவில் எங்களது சமூகத்தை சேர்ந்தவர்களை தவிர்த்து மற்ற சமூகத்தினர் புறவி எடுத்து விழா கொண்டாடி வருகின்றனர் இது சட்ட விரோதமானது இந்த திருவிழாவில் எனது சமூகத்தினரையும் ஒரு அங்கத்தினராக இணைத்து அனைத்து வழிபாடுகளிலும் எங்களுக்கு அனுமதி வழங்கி திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி பவானி சுப்புராயன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் குற்றவியல் வழக்கறிஞர் கண்ணன் ஆஜராகி மனுதாரர் புகார் குறித்து வட்டாட்சியர் தலைமையில் அனைத்து தரப்பினரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது அதில் அனைத்து தரப்பினரும் விழாவில் பங்கேற்கலாம் என முடிவும் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து -நீதிபதி அரசு தரப்பில் எடுக்கப்பட்ட அமைதி பேச்சுவார்த்தை நீதிமன்றம் ஏற்றுக் கொள்கிறது. அதே நேரத்தில் திருவிழாவில் தனிப்பட்ட எந்த நபருக்கும் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது அனைத்து சமூகத்தினரும் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டும் திருவிழாவில் தேவையற்ற எந்த சட்ட ஒழுங்கு பிரச்சினையும் எழுப்பக் கூடாது.
இந்தப் பகுதியின் தாசில்தார் இந்த விழாவை முழுமையாக கண்காணிக்க வேண்டும் தேவையான போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் இதில் ஏதேனும் பிரச்சனைகள் நடந்தாலோ நீதிமன்ற உத்தரவுகள் மீறப்பட்டிருந்தாலோ அனைத்திற்கும் சம்பந்தப்பட்ட தாசில்தார் / வட்டாட்சியர்தான் பொறுப்பு என உத்தரவிட்ட நீதிபதி திருவிழாவில் உயர்நீதிமன்ற உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது குறித்தும் அறிக்கையை வரும் 29ஆம் தேதி தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.