HR உன்ன கூப்பிடுறார் … (24)
உயரப் பார்ப்பதே உன்னதம்?
சென்றவாரத் தொடரைப் படித்துவிட்டு பல மின்னஞ்சல்கள் மற்றும் பின்னூட்டங்கள் வந்தன, நாம் பொறுப்புடன் பணிபுரிந்தால் அதிகாரம் தானாகவே நம்மிடம் வந்துவிடப்போகிறது என்று சிலரும், என்னதான் நாம் உயிரைக்கொடுத்து வேலை பார்த்தாலும், குறிப்பிட்ட துறை சார்ந்த அல்லது வருமானம் அதிகம் கொண்டுவரும் துறைக்கு மட்டும்தான் முன்னுரிமை தரப்படுகிறது என்று மனக்கசப்போடு சிலரும், அதிகார எண்ணம் பிறரை ஆட்டுவிக்கத் தோணும், பொறுப்போடு கூடிய அதிகாரம்தான் பிறரோடு இணைந்து பயணித்து வெற்றிகளைக் காண முடியும் என்று பல கலவையான கருத்துப்பரிமாற்றங்கள் வந்தது கண்டு பெருமைதான்.
இதையெல்லாம் தாண்டி, நாம என்னதான் வேலை செஞ்சாலும் சில துறைகளில் உள்ளவர்களுக்கான அங்கீகாரம் குறைவுதானே என மனித வளத்துறையில் உள்ள நண்பர் ஒருவர் சலிப்போடு இந்தக் கேள்வியைக் கேட்டார். நிறுவனத்தின் நோக்கமே வணிகம் சார்ந்ததுதான், அந்த வணிகத்தில் நெறி சார்ந்த சட்டதிட்டங்கள் மற்றும் செயல்பாடுகளைப் பொறுத்துத்தான் அதன் எதிர்காலம் சிறப்பாக இருக்கும், அப்படிப் பார்க்கும் போது, வணிகப் பெருக்கத்தில் (Business Development) உள்ளவர்களுக்குச் சற்று முன்னுரிமை தருவதில் தவறில்லை, ஆனால் முதல் உரிமையே அவர்களுக்குத்தான் எனும்போது பிரச்சனை அங்கு தலையெடுக்கும். நம்முடைய சிறப்பான பங்களிப்பு மற்றும் செயல்பாடுகளைப் பொறுத்தே நம் வளர்ச்சியும் அளவிடப்படும். நாம் எடுத்துக்கொண்ட வேலையில் நம் பங்கினை சிறப்பாகச் செய்யும் போது, நாம் தவிர்க்க இயலா அடையாளமாக மாறிவிடுவோம். இதை முழுவதுமாக மனதில் வைத்து செயல்படும்போது சலிப்புகள் மறைந்துவிடும்.
உயரப் பார்ப்பதே உன்னதம், இதென்ன புதுசா இருக்கு? எனத்தோணும், உயரப் பறப்பதே உன்னதம் எனும் சொல்லாடல்தானே நாம் அதிகம் பார்த்திருப்போம், அதென்ன உயரப் பார்ப்பதே உன்னதம். ஆம் நம்மில் பலர் சிலரது உயரத்தை அண்ணாந்து பார்த்து விட்டு அந்த ஏக்க எண்ணத்தோடே இருந்து விடுவார்கள், பார்ப்பதோடு பறக்கும் எண்ணமும் (செயலில் இறங்குவது) வந்துவிட்டால் நம்மிடம் ஒரு புத்துணர்ச்சி மேலிடும். அந்தப் புத்துணர்ச்சிதான் நம்மை அடுத்தடுத்த தளத்திற்கு கூட்டிச்செல்லும். நாம் என்னதான் புது முயற்சி எடுத்து சிறப்பாக பணி செய்தாலும், முறையான அங்கீகாரம் இல்லாமல் இருப்பது நம் குறையல்ல அது நம்மை மதிப்பிடுபவரின் குறை, தொடர்ந்து மனத்தொய்வில்லாமல் பணியை சிறப்பாகச் செய்யும்போது நம்மைப்பற்றிய மதிப்பு இன்னும் அதிகமாகும், அப்படி செய்தும் நாம் அடையாளம் காணப்படவில்லை என்றால் அது முழுக்க முழுக்க தனிமனித வெறுப்பாகத்தான் இருக்கும், இடம் மாற்றிக்கொள்வது நல்லது.
தமிழக முதல்வரின் முதன்மைச் தனி செயலாளராக உள்ள மதிப்புமிகு.உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் அவர்களின் “மாபெரும் சபைதனில்” நூலினை “வாருங்கள் படிப்போம்” குழுவின் சார்பாக திறனாய்வு செய்திருந்தேன், அத்திறனாய்வில் அவரும் பங்கெடுத்தார், தனக்கு கொடுக்கப்படும் பொறுப்புகள் அனைத்தையும் செம்மையாக செய்யும் திறன் கொண்டவர். அந்த நூலினில் அவர் குறிப்பிட்டுள்ள ஒரு கருத்து இங்கு இந்த சூழலுக்கு மிகவும் பொருந்தும். அரசின் பல திட்டங்களைக் கடைநிலை வரை கொண்டுசெல்லக்கூடிய செயலில் இருப்பது அரசு ஊழியர்கள்தான் மேலும் அவர்களின் அர்ப்பணிப்புள்ள செயல்பாட்டினை நாம் பேரிடர் காலத்தில் பார்த்திருப்போம், அப்படிப்பட்ட அரசு ஊழியர்களுக்கு பொதுமக்களிடம் உள்ள எண்ணம் வேறுமாதிரியாக உள்ளது, அதற்கு அவர் இந்த உவமையைக் கூறியிருப்பார். “கோவில் குடமுழுக்கின் போது அந்தக் கோவிலின் கோபுரத்தை பார்த்து வணங்கும் நீங்கள் அப்படியே அதை தாங்கியிருக்கும் கோபுரத்தின் அடித்தளத்தையும் அதன் தூண்களையும் நினைவில் கொண்டால் நீங்கள் பொறுப்புள்ள மனிதர்” இதை ஒவ்வொருவரும் சிந்தித்து வாழ்வாக்கினால் பெரும் சிக்கல்களை நாம் எளிதில் கையாண்டு நல்லதொரு புரிதல் உணர்வை மேம்படுத்தலாம்.
பொறுப்பு என்பது நம்மிடம் கொடுக்கப்பட்டுள்ள வேலை என்பதைத்தாண்டி நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட நம்பிக்கை எனும் எண்ணம் மேலிடும்போது அசைக்கமுடியா ஆற்றல் நமக்குள்ளே ஊற்றெடுக்கும். அது பலவித மாற்றங்களையும் ஏற்றங்களையும் நமக்குள்ளே உண்டாக்கும். நம்மைச் சுற்றி நமக்கெதிராக, நம் உயர்வுக்கு பின்னடைவாக பின்னப்படும் சிக்கல் வலைகளையும் அது செவ்வனே தீர்த்து வைக்கும். ஆதலால் செய்ய நினைப்பதை இன்றே செய்ய முற்படுவோம் ஏனெனில் காலம் நம் கையில் இல்லை, காலத்தின் கையில்தான் நாம் இருக்கிறோம்.
தொடர்ந்து பயணிப்போம்…
முனைவர். ம.இருதயராஜ், மனிதவளத்துறை உயர் மேலாளர்.
*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com
Super. பொறுப்பு பற்றி அருமையான ஆழமான சிந்தனைகள். வாழ்த்துக்கள் தம்பி.
Good
ஆழமான கருத்துக்களை அழகாக சொல்லி இருக்கிறீர்கள் வெற்றி பெற விரும்பும் ஒவ்வொருவரும் நம்பிக்கையுடன் செயலாற்றினால் வெற்றி நிச்சயம் என்பதே நிதர்சனம்
வாழ்த்துக்கள் சகோ?
உண்மைதான்
என்னதான் ஈடுபாட்டுடன் செயற்பட்டாலும் ஒரு சிறிய பாராட்டுக்கள் கூடக் கிடைக்காத நிலைதான் அரசு கடைநிலை ஊழியர்கள். தன்னை விடவும் அதிக ஊதியம் பெறும் சக ஊழியர்கள் கூட மதிப்பது கிடையாது. இதனாலேயே வேலையில் ஈடுபாடு குறைந்து போகிறது. மிக நன்று உங்கள் கருத்துக்கள் தோழர்
அருமை நண்பரே!!!