இலங்கை தமிழர்களுக்கு அனைத்து வசதிகளுடன் வீடு… அசத்திய முதல்வர்!
தமிழகத்தில் முதல் முறையாக இலங்கை தமிழர்களுக்காக அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய மறுவாழ்வு முகாமில் வீடு வழங்கிய முதல்வருக்கு நன்றி
தமிழகத்தின் முதல்முறையாக இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் சட்டமன்ற கூட்டத்தில் அறிவித்தார் அதன்படி திண்டுக்கல் அடுத்துள்ள தோட்டனுத்தில் ரூ 17 கோடியே 84 லட்சம் செலவில் 321 தனித்தனியாக வீடுகள் கட்டப்பட்டு பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவிற்கு தயாராக இருந்த நிலையில் இன்று 14.09.22 காலை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காணொளி காட்சி மூலம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை திறந்து வைத்தார்.
இங்கு கூடுதலாக கட்டப்பட்டுள்ள குடிநீர், அங்கன்வாடி மையம், நூலகம், தண்ணீர் தொட்டி, குளியலறை, சமுதாயக்கூடம், பூங்கா, மைதானம், சாலைகள் அமைக்கப் பட்டுள்ளது. மறுவாழ்வு மையத்தில் இலங்கை தமிழகர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் நடைபெற்ற விழாவில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏக்கள் செந்தில் குமார் காந்திராஜன் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்
இதுகுறித்து தோட்டனூத்து அகதிகள் முகாமில் வசித்து வரும் இலங்கை தமிழர்கள் கூறுகையில் :- கடந்த 32 வருடங்களுக்கு முன்பு இலங்கையிலிருந்து அகதிகளாக வந்த தங்களை தமிழக அரசு திண்டுக்கல் அடுத்துள்ள தோட்டனூத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான இடத்தில் தங்க வைத்தனர் இங்கு எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் கீற்று கொட்டகையிலும்,
தகர சீட்டின் கீழ் கடந்த 32 வருடங்களாக வசித்து வந்தோம் மழை காலத்திலும், வெயில் காலத்திலும் மிகவும் சிரமப்பட்டு வந்தோம். தங்களுக்கு நிரந்தரமான இடம் வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம் எங்களது கோரிக்கையை ஏற்று அனைத்து அடிப்படை வசதிகளுடன் கூடிய வீட்டை தமிழகம் முதல்வர் கட்டிக் கொடுத்துள்ளார் வீடு கட்டிக் கொடுத்த தமிழக முதல்வருக்கு மிகவும் நன்றி என தெரிவித்தனர்.