பாஜகவில் இணைந்த முன்னாள் முதலமைச்சர் : மூன்று எம்.எல்.ஏக்களை மட்டுமே வைத்து திண்டாடும் காங்கிரஸ்
40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டமன்றத்தில், காங்கிரஸில் 11 சட்டமன்ற உறுப்பினர்களும், பாஜகவில் 20 சட்டமன்ற உறுப்பினர்களும் இருந்தனர். ஆனால் இன்று காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் திகம்பர் காமத், மைக்கேல் லோபோ (முன்னாள் கோவா மாநில காங்கிரஸ் தலைவர்) உட்பட 8 காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள் பாஜகவில் இணைந்துள்ளனர். இதனால் காங்கிரஸில் மொத்தம் மூன்று எம்.எல்.ஏக்களே உள்ளனர். இச்செய்தி கோவா அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
பாஜகவில் இணைந்த எம்எல்ஏக்கள்: திகம்பர் காமத், மைக்கேல் லோபோ, டெலிலா லோபோ, ராஜேஷ் பால்தேசாய், கேதர் நாயக், சங்கல்ப் அமோன்கர், அலிக்சோ செக்வேரா மற்றும் ருடால்ப் பெர்னாண்டஸ் ஆகியோர் பாஜகவில் இணைந்துள்ளனர். கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தலைமையில் இவர்கள் பாஜகவில் இணைந்தனர் .
இதுகுறித்து முன்னாள் கோவா மாநில காங்கிரஸ் தலைவர் மைக்கேல் லோபோ கூறியது, “பிரதமர் மோடி மற்றும் முதல்வர் பிரமோத் சாவந்தின் கரங்களை வலுப்படுத்தவே நாங்கள் பாஜகவில் இணைந்துள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாஜக ஐடி விங் தலைவர் அமித் மாளவியா, ராகுல் காந்தியையும்,பாரத் ஜோடோ யாத்ராவை குறித்தும் ட்விட்டரில் கிண்டல் செய்துள்ளார். அவர் வெளியிட ட்வீட், “காங்கிரஸைக் காப்பாற்றுவதில் ராகுல் காந்தி கவனம் செலுத்த வேண்டும். ராகுல் காந்தி சாலையில் இருக்கும் நேரத்தில் காங்கிரஸைக் கைவிட 8 கோவா எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளனர். காங்கிரஸில் ஒரு எம்.எல்.ஏ கூட இல்லாத பல மாநிலங்கள் உள்ளன என்பதை ராகுல் காந்தி நினைத்து பார்க்க வேண்டும்.” என்று ட்வீட் செய்துள்ளார்.
கடந்த 2019-ம் ஆண்டு ஜூலை மாதம், கோவா மாநிலத்தில் 10 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு மாறியது குறிப்பிடத்தக்கது.