பெங்களூரு: நோயாளியை காப்பாற்ற மருத்துவர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்..!!
பெங்களூரு போன்ற பெருநகரத்தில் மழைக்காலங்களில் போக்குவரத்து சற்று கடினமான விஷயம். பெங்களூர் சாலைகளில் மழைநீர் தேங்கியது அனைவரும் அறிந்ததே
இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி பெங்களூரு மழை, வெள்ளத்துக்கு இடையே போக்குவரத்து நெரிசல் ஏற்பட மருத்துவர் ஒருவர் அதில் மாட்டிக் கொண்டார். குறித்த நேரத்தில் அறுவை சிகிச்சைக்கு செல்ல வேண்டி இருந்ததால் அவர் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தை 45 நிமிடங்கள் ஓட்டமும் நடையுமாக கடந்து சென்று கடமையை நிறைவேற்றியுள்ளார்.
பெங்களூர் சர்ஜாபூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் கோவிந்த் நந்தகுமார் சர்ஜாபூர் மாரதஹல்லி இடையே கடுமையான போக்குவரத்தில் மாட்டிக் கொண்டார்.
மருத்துவமனையில் பித்தப்பை அறுவை சிகிச்சைக்காக நோயாளி தயாராக இருக்க மருத்துவர் நந்தகுமார் காரில் இருந்து இறங்கி மருத்துவமனையை நோக்கி சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் ஓடியுள்ளார். அதன் பின் குறித்த நேரத்தில் சரியான மருத்துவ உதவி அளிக்கப்பட்டு அந்த நோயாளி காப்பாற்றப்பட்டார். தற்போது இந்த மருத்துவரின் சேவை குறித்த தகவல் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.