டன் கணக்கில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல், மொத்த விற்பனையாளர் உட்பட 7 பேர் கைது.
பர்கூர் மலைப்பகுதியில் 1.5 டன் குட்கா பொருட்கள், ரொக்கம் ரூ 50 ஆயிரம், ஒரு கார் மற்றும் சரக்கு வாகனம் ஒன்றும் பறிமுதல். குட்கா பொருட்கள் மொத்த விற்பனையாளர் உட்பட ஏழு பேர் கைது. கர்நாடகா மொத்த விற்பனையாளர் தலைமறைவு
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் உள்ள காவல் சோதனை சாவடியில் நேற்று நள்ளிரவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டனர்.
அதில் மக்காச்சோளம் மூட்டைகளுக்கு அடியில் 55 மூட்டைகளில் 1.5 டன் எடையுள்ள புகையிலை பொருட்களான ஹான்ஸ் 3500 பாக்கெட்டுகள், விமல் பான் மசாலா 3ஆயிரம் பாக்கெட்டுகள், ஆர் எம் டி பான் மசாலா, புகையிலை உள்ளிட்டவைகள் 55 மூட்டைகளில் 1.5 டன் எடையுள்ள குட்கா பொருட்கள் இருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு ரூ 13 லட்சம் ஆகும்.
தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் வாகனத்தை ஓட்டி வந்த கர்நாடக மாநிலம் ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (60) என்பவரை கைது செய்தனர். மேலும் சரக்கு வாகனத்தின் பின்னால் வந்த காரில் குட்கா பொருட்களின் உரிமையாளரான பவானி தான சாவடி வீதியைச் சேர்ந்த அருண் (35) என்பவரை போலீசார் கைது செய்து அவரது காரில் இருந்தும் குட்கா பொருட்கள் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தியதில்.
அவர் கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியில் இருந்து குட்கா பொருட்களை வாங்கி வந்து ஈரோடு மாவட்டத்தில் சட்டவிரோதமாக கடைகளில் விற்பனை செய்வது தெரிய வந்தது , மேலும் அவர் யாராருக்கெல்லாம் குட்கா பொருட்களை விற்பனை செய்கிறார் என்பதை விசாரணை செய்ததில்
அவர்கள் மையிலம்பாடி, கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் (38), ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த சேர்ந்த திருப்பதி (32), கடத்தூர் , இந்திரா நகரை சேர்ந்த அசோக்குமார் (35), சத்தியமங்கலம் ரங்கசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் (31) மற்றும் பவானி திருவள்ளுவர் நகர் பகுதியை சேர்ந்த வஞ்சரவேல் (53) என தெரிய வந்ததை அடுத்து இவர்களையும் போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து ஏழு பேர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை பவானி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவான குட்கா பொருட்களின் மொத்த விற்பனையாளரான கர்நாடகா மாநிலம் சாம்ராஜ் நகரை சேர்ந்த கனகராஜை போலீசார் தேடி வருகின்றனர்.