கர்நாடகாவில் பயணியை உதைத்த நடத்துனர்: இடைநீக்கம் செய்த அரசு..!!
பயணியை காலால் எட்டி உதைக்கும் நடத்துனரை இடைநீக்கம் செய்துள்ளது கர்நாடக அரசு. கர்நாடக மாநிலம் தக்சினா கன்னடா அருகே சுல்லியா பகுதியில் உள்ள ஈஸ்வரமங்களா என்ற பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த பேருந்தில் பயணி ஒருவர் ஏற முயன்றுள்ளார்.
அவர் மது போதையில் இருந்த நிலையில் அவரை பேருந்தில் ஏற விடாமல் நடத்துனர் தடுத்துள்ளார். மேலும் அவரை பேருந்தை விட்டு கீழே இறங்கும் படி கூறியுள்ளார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த நடத்துனர் படிக்கட்டில் நின்றபடி அந்த பயணியை கன்னத்தில் அடித்துள்ளார். அதையும் மீறி அந்த நபர் பேருந்து உள்ள சென்ற நிலையில் அவரை நடத்துனர் எட்டி உதைத்து கீழே தள்ளியுள்ளார்.
அதன் பிறகு பேருந்தின் கதவை மூடி விட்டு பேருந்தை இயக்கியுள்ளனர். போதையில் இருந்த அந்த நபர் சாலையிலேயே விழுந்து கிடந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகிய நிலையில் அந்த நடத்துனர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.