சமஸ்கிருதம் சர்ச்சை: உங்கள் விளம்பரத்திற்காக மனுவை விசாரிக்க முடியாது – உச்சநீதிமன்றம்
சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சமஸ்கிருத மொழியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்றும், பள்ளி பாடங்களில் இம்மொழியை கட்டாயமாக்கப்பட வேண்டும் எனவும் வலதுசாரி அமைப்புகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது சமஸ்கிருதம் குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சமஸ்கிருத மொழியை தேசிய மொழியாக அறிவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் ஓய்வு பெற்ற ஐ ஏ எஸ் அதிகாரியும் வழக்கறிஞருமான கேஜி வன்சாரா பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இதில், “சமஸ்கிருதத்தை தேசிய மொழியாக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்” என்று கோரியிருந்தார். இவ்வாறு உத்தரவிடுவதன் மூலம், நாட்டின் அலுவலக மொழியாக இருக்கும் ஆங்கிலம் மற்றும் இந்திக்கு மொழிகளுக்கு இது எந்த இடையூறும் ஏற்படுத்தாது என்று மனுவில் கேஜி வன்சாரா கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.ஆர்.ஷா மற்றும் கிருஷ்ணா முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும், இது குறித்து விவாதிக்க வேண்டிய இடம் நாடாளுமன்றம் தான், நீதிமன்றம் அல்ல என்றும் கூறியுள்ளனர். “இது கொள்கை சார்ந்த விஷயம் அதை எங்களால் மாற்ற முடியாது. உங்கள் விளம்பரத்திற்காக எங்களால் மனுவை விசாரிக்க முடியாது” என்று காட்டமாக கூறியது.