நீட் தேர்வு உள்ளாடை விவகாரம்: மறுதேர்வு எழுத மாணவிகளுக்கு வாய்ப்பு..!!
நீட் தேர்வின்போது கேரளாவில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதுவதற்கு முன், உள்ளாடைகளை கழற்ற கட்டாயப்படுத்தப்பட்ட மாணவிகளுக்கு தேசிய தேர்வு முகமை வரும் செப்டம்பர் 4 ஆம் தேதி மீண்டும் நீட் தேர்வு நடத்த முடிவு எடுத்துள்ளது.
ஜூலை 17 ஆம் தேதி ஆயூர் தேர்வு மையத்தில் நடந்த நீட் தேர்வில் கலந்து கொண்ட மாணவிகளை சோதனை என்ற பெயரில் பணியமர்த்தப்பட்ட பெண்கள், உலோகக் கொக்கிகள் கொண்ட தங்கள் உள்ளாடைகளை கழற்றுமாறு கட்டாயப்படுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
இந்த சம்பவம் குறித்து சில மாணவிகள் போலீசில் புகார் அளித்ததை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் மாணவிகளை சோதனை செய்த பெண்கள் மற்றும் நீட் ஒருங்கிணைப்பாளர் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் செப்டம்பர் 4 ஆம் தேதி மறுதேர்வு நடத்துவது தொடர்பாக தகவல் கிடைத்துள்ளது. அதே மையத்தில் தேர்வு எழுதிய பல மாணவிகளுக்கும் மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்கள் மீண்டும் தேர்வு எழுத வேண்டும் என்பது கட்டாயமில்லை என கூறப்படுகிறது.