HR உன்ன கூப்பிடுறார்…(21)
வேலையைத் தாண்டி வேறென்ன வேன்டும்?
நமக்கான ஒரு வேலைதான் நமக்கான ஓர் அங்கீகாரம். அந்த அங்கீகாரம்தான் நமது அடையாளத்தையும் சமூக உறவையும் மேம்படுத்தும். வேலை மட்டும் தெரிந்திருந்தால் போதுமா மற்றேதும் தேவையில்லையா? யார் சொன்னது? வேலை நமது பொருளாதாரத்தை உயர்த்தும், அந்த வேலையில் நாம் காட்டும் முறையான அணுகுமுறைதான் நம்மை அடுத்த கட்டத்திற்கு இட்டுச்செல்லும் இன்னும் சொல்லப்போனால் நிம்மதியைத் தரும். நமது அணுகுமுறை நன்றாக இருக்கவேண்டும் என்பது சரி, நமக்கு மேல் இருப்பவரின் (Manager /Team Leader) அணுகுமுறை தாறுமாறாக இருந்தால் என்ன செய்வது. முடிந்தால் அதை சகித்துக்கொள்ளவேண்டும், சகிப்பு எல்லைக்கு அப்பால் இருந்தால் வேலை மாற்றத்திற்கான முயற்சியில் இறங்கவேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக நான் இதுபோன்ற உயர் பொறுப்புக்கு வரும்போது இப்படிச் செயல்படமாட்டேன் எனும் உறுதியையும் எடுத்துக்கொள்ளவேண்டும். லேசா லேசா படத்தில் பார்த்த ஒரு காட்சி என் நினைவிற்கு வருகிறது. ஏன்டா நேத்து செடிகளுக்கு தண்ணி ஊத்தல என்று முதலாளி கேட்கிறார், நேத்து ரொம்ப மழை பேஞ்சுச்சு அதான் ஊத்தல அய்யா, மழை பேஞ்சா குடைய புடிச்சிட்டு ஊத்த வேண்டியதுதானே, நான்சென்ஸ், (Nonsense) என்று சொல்லிவிட்டு கோபத்தோடு செல்கிறார். இதுபோன்ற சிலர் இருக்கத்தான் செய்வார்கள், அவர்களை கொஞ்சம் வேறுமாதிரிதான் கையாளவேண்டும் என்பதை தாழ்மையோடு கூறிக்கொள்கிறேன்.
இன்னொரு உதாரணத்தையும் சொல்கிறேன், எனது மனிதவள நண்பர் பணியாற்றும் நிறுவனத்தில் பணியாளர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டபோது, அந்த நிறுவனத்தில் ஒரு குறிப்பிட்ட துறையின் உயர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தாராம், வேலைக்கு வரும்போதே, நான் நன்றாக வேலைசெய்வேன் எனும் உத்தரவாதத்தோடுதானே வருகிறார்கள், பிறகென்ன இதுபோன்ற தேவையில்லாத நேரக்கொலை, ஆதலால் என்னுடைய குழுவிற்கு இந்த பயிற்சி தேவையில்லை என்று சற்று கடுமையாகவே கூறினாராம், இன்னொரு பெரிய கூத்து (Highlight) என்னவென்றால், எதற்குப் பயிற்சி? ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து செயல்படுவதற்காக, No No அப்படியெல்லாம் வேணாம், ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்துகொண்டால் வேலை நடக்காது, மாறாக அவர்களுக்குள் பேச்சுதான் அதிகமாகும், நாம் அவர்களை Control பண்ணமுடியாது எனும் அரிய கருத்தை முன்வைத்தாராம், இப்படி மூளை மங்கிய சிலர் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்வார்கள். இவர்களை மாற்ற முற்பட்டால் நமக்கு வேறுவிதமான குடைச்சலை மறைமுகமாகத் தருவார்கள், நமக்கான நேரம் வரும்வரை காத்திருப்பதுதான் நல்லது. ஊதியம் பெறுபவன் அடிமையல்ல, ஊதியம் கொடுப்பவன் கடவுளும் அல்ல எனும் மேம்பட்ட கருத்து நம் வாழ்வாகும்போது இதுபோன்ற பிழைகள் சரிசெய்யப்படலாம். எனக்குப் பிடித்த ஒரு வாசகம் இந்த சூழலுக்குப் பொருந்தும் என நினைக்கிறேன் “பாதைகளில் தடைகள் இருந்தால் அதைத் தகர்த்துவிட்டுத்தான் செல்லவேண்டும் என்றில்லை தவிர்த்து விட்டும் செல்லலாம்”.
என்ன அந்த அணுகுமுறை,? குழுவோடு இணைந்து பணியாற்றுவது, தக்க சமயத்தில் குழுவில் இருப்பவர்களுக்கு உதவுவது, முரண்பட்ட கருத்துகளை தவிர்ப்பது, பொறுப்புகளை ஏற்றுக்கொள்வது, முடிந்தளவு அனைவரையும் அரவணைத்துச் செல்வது. இதைச் சரிவர செய்யும்போது நமக்கான உயர்வு தானாக நம்மைத்தேடி வரும். நாம் பெருமை கொள்ளவேண்டிய பலநேரங்களில் பொறுமை தான் அந்தப் பெருமையைத் தந்திருக்கும் ஏனெனில் பொறுமை நம் மனவலிமையை அதிகரிக்கும். துவக்கத்தில் வேலையைத்தேடி நாம் செல்வதும், சில காலங்கள் கழித்து வேலை நம்மைத்தேடி வருவதும் நம் உயர்வின் தனிச்சிறப்பு. அந்தச்சிறப்பை நாம் அனைவரும் பெற முயற்சிப்போம்.
வேலைக்கான அறிதல் நமக்கு நல்ல சம்பளம் தரும், வேலைக்கான புரிதல் நமக்கு உயர் பொறுப்புகளைத் தரும்.
தொடர்ந்து பயணிப்போம்…
முனைவர். ம.இருதயராஜ், மனிதவளத்துறை உயர் மேலாளர்.
*கட்டுரையாளர் தொடர்புக்கு. hr.iru2018@gmail.com
அருமை தோழர் ? நல்ல கருத்துக்கள் . வேலை செய்பவர்களுக்கு அடிமை எண்ணம் இருக்கிறதோ இல்லையோ அதிகார வர்க்கத்தில் இருப்பவர்கள் தங்களுக்கு கீழ் பணியாற்றுபவர்களை கொஞ்சம் மட்டமாகவே நினைக்கிறார்கள்.
Yes. Sincerity and involvement take you to great heights.
Very nice post bro. Such a wonderful message u told team work
Nice sir
Extraordinary