இந்தியாவின் வளர்ச்சிக்கான முதுகெலும்பாக சிறு குறு தொழில்கள் விளங்குகிறது – ஆனந்த் மஹிந்திரா
மிகப்பெரிய அளவில் உற்பத்தித் துறையில் வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டியது அவசியம் என்று தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது அரசாங்கம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகிறது. தனியார் துறையில் அவை கீழ்மட்ட அளவில், பகுதி நேர அல்லது ஒப்பந்த தொழிலாளர்களாக மட்டுமே உருவாக்கப்படுகிறது.
தற்போதைய நிலையில் இந்தியாவுக்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன. இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வதில் சில குறைபாடுகள் உள்ளன. அதில் முதன்மையானது, அதிகரித்து வரும் வேலைவாய்ப்பின்மை. இந்தியாவின் வேலைவாய்ப்பு இல்லாத நிலை 7-8 சதவீதமாக இருக்கிறது. உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி க்கு இணையாக வேலைவாய்ப்பு வளர்ச்சி இல்லாததே இதற்கு காரணம்.
உலகின் அதிகமான இளைஞர் சக்தியை கொண்டுள்ள இந்தியாவில், இளைஞர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ற அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்க வில்லை என்றால் உருவாகப்போகும் சமூக எதிர்வினையை நம்மால் எளிதாக கற்பனை செய்ய முடியும். உண்மையில் இந்தியாவில் வேலை செய்யும் திறன் கொண்டவர்கள் 40 சதவீத இளைஞர்கள் மட்டும் வேலையில் இருக்கிறார்கள்.
அமெரிக்காவில் 90 சதவீத புதிய தொழில்கள் மாம் அண்ட் பாப் எனச் சொல்லப்படும் சிறு தொழில்கள். குறைவான முதலீடுகளை கொண்டுள்ள அவர்கள் அமெரிக்காவின் 67 சதவீத வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. இந்தியாவின் வளர்ச்சிக்கான முதுகெலும்பாக சிறு குறு தொழில்கள் விளங்க முடியும். எதிர்காலத்தில் நம்பிக்கை வைத்து முதலீடுகளை அதிகப்படுத்த வேண்டும் என்று ஆனந்த் மகேந்திரா தெரிவித்தார்.