உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யு.யு.லலித் பெயர் பரிந்துரை..!!
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் பணிகள் அதிகாரப்பூர்வமாக தொடங்கி உள்ளன. தலைமை நீதிபதி என்.வி.ரமணா நேற்று யு.யு.லலித்தை சந்தித்து தனது பரிந்துரை கடிதத்தின் நகல் ஒப்படைத்தார். தற்போதைய தலைமை நீதிபதியாக என்.வி.ரமணா உள்ளார்.
இவரது பதவிக்காலம் ஆகஸ்ட் 26 ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. இதையடுத்து அடுத்த தலைமை நீதிபதியை தேர்வு செய்யும் நடவடிக்கைகளில் மத்திய சட்ட அமைச்சகம் களமிறங்கியது.
பதவி காலத்தை நிறைவு செய்யும் தலைமை நீதிபதியே, தனக்கு அடுத்து வரப்போகும் தலைமை நீதிபதி யார் என்பதை பரிந்துரை செய்வதே வழக்கம் நடைமுறையில் இருந்து வருகிறது.
அதன்படி, தனக்கு அடுத்து யார் பதவிக்கு வர வேண்டும் என்பதை தற்போதைய தலைமை நீதிபதி என்.வி. ரமணா பரிந்துரை செய்யுமாறு மத்திய சட்ட அமைச்சகம் அவருக்கு கடிதம் எழுதி இருந்தது.
அதைத் தொடர்ந்து ரமணா, லலித் பெயர் பரிந்துரைத்துள்ளார். தற்போது உச்சநீதிமன்றத்தில் 2வது மூத்த நீதிபதி லலித் தான். 1985ம் ஆண்டு டிசம்பர் வரை மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக இருந்த லலித், அதற்கு அடுத்த ஆண்டு முதல் டெல்லி வந்தார்.
புதிய தலைமை நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ள யு.யு லலித்தின் பதவிக்காலம் 3 மாதத்திற்கு குறைவாக இருக்கும். ஏனெனில் வரும் நவம்பர் 8 ஆம் தேதியுடன் யு.யு. லலித் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.