இனி இதை விற்பனை செய்தால் ரூ.5 ஆயிரம் அபராதம்… மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் கடைகளில் பிளாஸ்டிக் விற்பனை செய்தால் ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரேயா பி.சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் 2.8.2022 மற்றும் 3.8.2022 ஆகிய இரு தினங்கள் வல்வில் ஓரிவிழா அரசின் சார்பில் மிகச் சிறப்பாக நடைபெற உள்ளது. வல்வில் ஓரி விழாவை ஒட்டி மலர் கண்காட்சி, அரசு துறைகளின் பணி விளக்க முகாம் கண்காட்சி, சுற்றுலா விழா ஆகியவை நடைபெற உள்ளன.
கொல்லிமலை செல்லும் பகுதியில் காரவள்ளி, முள்ளுக்குறிச்சி, வேலிக்காடு வழி ஆகிய இடங்களில் வனத்துறை மற்றும் காவல்துறையினரால் வாகனங்கள் ஆய்வு செய்யப்படும். பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். எனவே சுற்றுலா பயணிகள் எக்காரணம் கொண்டும் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டுவர வேண்டாம். சுற்றுலா பயணிகள் பயன்படுத்தும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை சேகரிக்க ஆங்காங்கே தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் மட்டுமே பயன்படுத்திய குடிநீர் பாட்டில்களை போடவேண்டும்.
கடைகளில் ஒருமுறை பயன்டுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும். எனவே கடைக்காரர்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது.
கொல்லிமலையில் கடத்த ஒரு மாத காலமாக தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் ஆகாய கங்கை, மாசிலா அருவி, நம் மருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நீர்வரத்து மிக அதிகமாக உள்ளது. இதன் காரணமாக அருவிகளுக்கு செல்லவோ, குளிக்கவோ சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் அனுமதி கிடையாது. இருசக்கர வாகனங்களில் கொல்லிமலைக்கு வருபவர்கள் கண்டிப்பாக ஹெல்மெட் அணிந்து வர வேண்டும்.