“பள்ளியில் இருந்து எடுத்துச்சென்ற பொருட்களை ஒப்படையுங்கள்” – தண்டோரா போட்டு எச்சரிக்கை
பள்ளி கலவரத்தின் போது தூக்கிச் சென்ற பொருட்களை திரும்ப ஒப்படைக்க கோரி கனியாமூர் கிராமத்தில் தண்டோரா அறிவிப்பு.
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் மாணவி மர்மமான முறையில் உயிரிழந்ததற்கு நீதி வேண்டும் என்ற பெயரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளி அருகே ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டம் ஒரு கட்டத்தில் கலவரமாக மாறியது. கலவரத்தின் பள்ளி கட்டிடங்களை சூரையாடிய போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பள்ளியில் இருந்த கம்ப்யூட்டர், நாற்காலிகள், மாணவர் இருக்கை மற்றும் மேஜைகள், மின் விசிறிகள், குளிர் சாதனப் பெட்டி உட்பட பள்ளி வளாகத்தில் இருந்து ஆடு, மாடு, கோழிகளை பள்ளியை சுற்றியுள்ள கிராம மக்கள் எடுத்துச் சென்றனர். இதன் வீடியோ காட்சிகளும் கலவரத்திற்கு பிறகு வெளியானது.
இந்த நிலையில், பள்ளிக் கலவரம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ள சூழலில், பள்ளியிலிருந்து எடுத்துச் சென்ற பள்ளியின் உடமைகளை தூக்கிச் சென்றவர்கள், போலீஸார் விசாரணைக்கு உள்ளாக நேரிடும்.
ஆகவே எடுத்து சென்ற பொருட்களை மீண்டும் பள்ளி வளாகத்திலேயே கொண்டு வந்து வைத்துவிடும் படி, சின்னசேலம் வட்டாட்சியர் உத்தரவின் பேரில், கிராம உதவியாளர் கனியாமூர் கிராமத்தில் தண்டோரா மூலம் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தார்.