பொது மக்களின் பிரச்சனைக்காக நாங்கள் குரல் கொடுப்போம் – ராகுல் காந்தி
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கி ஆகஸ்ட் 12-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில், நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, பாராளுமன்றத்தில் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும், தேவைப்பட்டால் விவாதம் நடத்த வேண்டும் என பேசியிருந்தார்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கபூர்வமாக அமைய அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆழ்ந்து சிந்தித்து செயல்பட வேண்டும் என தெரிவித்திருந்தார்.இந்த நிலையில், இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு 80 ரூபாய் உயர்ந்துள்ளது.
மேலும் சிலிண்டர் விலை 1000 க்கு மேல் அதிகரித்துள்ளது. ஜூன் மாதத்தில் மட்டும் 1.3 கோடி பேருக்கு வேலை இழந்துள்ளனர். பொது மக்களின் பிரச்சனைக்காக நாங்கள் குரல் கொடுப்பதை யாராலும் தடுக்க முடியாது. அரசு பதில் சொல்லியே தீர வேண்டும் என்று ட்வீட் செய்துள்ளார். மேலும் பிரதமரே, விவாதங்களையும், கேள்விகளை தவிர்ப்பதும் தான் பாராளுமன்ற விவாத முறைக்கு எதிரானது என பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் மத்திய அரசின் தடையை மீறி டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பணவீக்கம், ஜிஎஸ்டி விலைவாசி உயர்வுக்கு எதிராக கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.