காலநிலை மாற்றம்: வெப்ப அலையில் சிக்கி தவிக்கும் சில நாடுகள்..!!
காலநிலை மாற்றம் காரணமாக உலக நாடுகள் தொடர்ந்து கடும் தீவிர இயற்கை பேரிடர்களை சந்தித்து வருகின்றன. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளின் வரலாறு காணாத கடும் வெப்ப அலை உருவாகியுள்ளது. இங்கிலாந்து, பிரான்ஸ் நாடுகளில் ஜூலை தொடக்கம் முதலே வெப்பத்தின் அளவு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் போர்ச்சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் மட்டும் கடந்த ஒரே வாரத்தில் கடும் வெப்பம் காரணமாக பலியானவர்கள் எண்ணிக்கை 1000-ஐ தாண்டியுள்ளது. போர்ச்சுக்கலில் கடந்த வாரத்தில் மட்டும் 659 பேர் வெப்ப அலைக்கு பலியாகினர்.
ஜூலை 10ம் தேதி முதல் கடும் வெப்பம் நிலவுவதால் இரு நாடுகளிலும் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு 38 டிகிரி செல்சியஸ் முதல் 43 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகும் என்று கூறப்பட்டுள்ளது. மேலும், ஜூலை 14 தேதி போர்ச்சுகல் பின்ஹோவில் 47 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது என போர்ச்சுக்கலின் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பூமி வெப்பமாதலை தடுப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க உலகத் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இங்கிலாந்தின் தெற்குப் பகுதியில் 40 டிகிரி செல்சியஸ் அதிகபட்ச வெப்பநிலை தற்காலிகமாக பதிவாகியுள்ளதாக பிரிட்டனின் வானிலைத் துறை தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் இதுவரை இல்லாத அதிகபட்ச வெப்பநிலை இதுவாக இருக்கும் என்று கூறப்படுகிறது