விவசாய கடன் ரத்து – இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே அறிவிப்பு
இலங்கையில் விவசாய கடன் ரத்து செய்யப்படும் என இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில் 2 ஏக்கர் நிலத்திற்கு பயிர் கடன் வாங்கிய விவசாயிகள் கடன்கள் ரத்து செய்யப்படும் என அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருப்பதால், பெட்ரோல் விலையும் விரைவில் குறைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தற்போது இருக்கும் சூழலில் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்க உள்ளதாகவும் கூறியுள்ளார்.
இலங்கையின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க அனைத்து கட்சி ஆட்சியை அமைக்கும் என்றும் இடைக்கால அதிபர் தெரிவித்திருக்கிறார். இலங்கையில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு சாதாரண மக்களையும் பாதித்துள்ளது. கொழும்பின் தெருக்களில், குறைவான பேருந்து மட்டும் ஓடுகின்றன, பெட்ரோல் நிலையங்களுக்கு வெளியேயும் நீண்ட வரிசையில் வாகனம் காத்து இருக்கிறது.
இது தவிர பெரும்பாலான குடியிருப்பாளர்கள் தங்களிடம் உள்ள சிறிய எரிபொருளை அவசரத்திற்கு வைத்துக் கொண்டு நீண்ட தூரம் நடந்து வருகின்றனர். இந்நிலையில் இலங்கையின் தற்காலிக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டில் அவசரகால நிலையை பிரகடனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.