`உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்க முடியாது’- டாஸ்மாக்கை மூட நீதிமன்றம் மறுப்பு!
டாஸ்மாக் தொடர்பான வழக்கில், மக்கள் போராட்டம் நடக்கிறது என்பதற்காக உணர்ச்சி வசப்பட்டு நீதிமன்றம் எந்த முடிவுக்கு வர முடியாது என கருத்து தெரிவித்த நீதிபதிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகேபொதுமக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக் கடையை மூடு உத்தரவிட கோரி உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. நடைகாவு பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
நித்திரவிளை அருகேயுள்ள நம்பாளிசாலை ஆற்றுப்புரம் பகுதியில் அரசு டாஸ்மாக் கடை உள்ளது. இது பொதுமக்களுக்கு பெரும் இடையூறாக உள்ளது. மக்கள் போராடி வருகின்றனர். எனவே, டாஸ்மாக் கடையை மூடுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில், இதேபோல் வேறொரு மனு ஏற்கனவே தாக்கலானது. அதில், வக்கீல் கமிஷனர் ஆய்வு செய்து, விதிப்படி கடை இயங்குவதாகவும், குறிப்பிட்ட தொலைவில் பள்ளி, கல்லூரியோ, வழிபாட்டு தலங்களோ இல்லை என நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதால் அந்த மனு தள்ளுபடியானது என கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், -டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டம் நடக்கிறது என்பதற்காக உணர்ச்சி வசப்பட்டு நீதிமன்றம் முடிவுக்கு வர முடியாது என தெரிவித்த நீதிபதிகள் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டுள்ளனர்.