கனமழை எதிரொலி: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய அலர்ட்!!
கர்நாடகாவின் தென்மேற்குப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் முக்கிய அணைகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் காவிரி கரையோரங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவேரி நீர்பிடிப்பு மாவட்டங்களான குடகு, சாம்ராஜ் நகர், சிங் மங்களூர் உட்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கே.ஆர்.ஆர்.எஸ் மற்றும் கபிணி அணைகளுக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்துள்ளது.
குறிப்பாக கே.ஆர்.ஆர்.எஸ் அணைக்கு வினாடிக்கு 33 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து உயர்ந்துள்ளது. இதே போல் கபினி அணைக்கு நீர்வரத்து 18 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. ஓரிரு நாட்களில் இரண்டு அணைகளும் முழு கொள்ளவை எட்டவுள்ளதால் விரைவில் உபரி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் காவிரி கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. குடகு மாவட்டத்தில் மடிக்கேரி பகுதியில் கனமழை காரணமாக 3-வது நாளாக தேசிய நெடுஞ்சாலையில் தொடர் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. இதுவரை 6 இடங்களில் ஏற்பட்டுள்ள மண்சரிவை சீர் செய்யும் பணிகளில் மாவட்ட நிர்வாகம் ஈடுப்பட்டுள்ளது.
இதனால் குடகு- மங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து முடங்கியுள்ளது. மேலும், மும்பை, கேரளா போன்ற மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.