டெல்லியில் கோலாகலம்..!! பிரம்மாண்ட ஷாப்பிங் திருவிழாவை அறிவித்த அரவிந்த் கெஜ்ரிவால்
ரீடைல் விற்பனை சந்தையில் வர்த்தகத்தை ஊக்குவிக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரம்மாண்ட அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். டெல்லி மாநிலத்தின் வர்த்தகம் வருவாய் அதிகரிக்கவும், சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும் டெல்லி அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
ஈகாமர்ஸ் தளத்தில் வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும், தக்கவைக்கவும், வர்த்தகம் மற்றும் வருமானத்தை கூட்டவும் வருடம் ஒரு முறை நடத்தப்பட்ட தள்ளுபடி விற்பனை ஆனது தற்போது வருடத்திற்கு மூன்று முறை நடத்தப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவிலேயே மிகப்பெரிய ஷாப்பிங் திருவிழாவாக 30 நாள் டெல்லி ஷாப்பிங் திருவிழா இருக்கும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்னும் சில வருடங்களில் இது உலகின் மிகப்பெரிய ஷாப்பிங் திருவிழாவாக மாற்றுவோம் என தான் நம்புவதாக டெல்லி முதல்வர் கூறியுள்ளார். மேலும், இந்தத் தனித்துவமான திருவிழாவிற்கு, டெல்லி மற்றும் அதன் துடிப்பான கலாச்சாரத்தை அனுபவிக்க இந்திய மற்றும் உலக நாடுகளில் இருக்கும் மக்களுக்கு சிறந்த வாய்ப்பாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த 30 நாள் ஷாப்பிங் திருவிழா மூலம் டெல்லி மாநிலத்தின் வர்த்தகம் மேம்படுவதுடன் புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்க வழிகள் பிறக்கும். அனைத்திற்கும் மேலாக மாநிலத்தின் பொருளாதாரம் பெரிய அளவில் மேம்படும். மேலும் டெல்லியில் இருக்கும் வியாபாரிகள், தொழிலதிபர்களுக்கு இந்த 30 நாள் ஷாப்பிங் திருவிழா மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்தார்.