காற்றாலை துறையில் வணிகத்தை விரிவுபடுத்த மும்முரம் காட்டும் குரிட் நிறுவனம்..!
பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் குரிட் நிறுவனம் தற்போது சென்னையில் காம்போசைட் சொல்யூசன் தயாரிப்புக்கு என்று தனி ஆலையை திறந்துள்ளது. சுவிட்சர்லாந்தை தலைமையிடமாகக் கொண்ட குரிட் குழுமம் சென்னையில் ரூ.250 கோடி முதலீட்டில் காம்போசைட் சொல்யூஷன் தயாரிப்பு ஆலையை அமைத்துள்ளது.
குரிட் நிறுவனம் முதலில் சுவிட்சர்லாந்தில் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் ஜவுளித் துறையில் கவனம் செலுத்திய இந்நிறுவனம், அடுத்தடுத்து கால கட்டத்தில் ரப்பர், கண்ணாடி தயாரிப்புகளில் கால் பதிக்க தொடங்கியது.
தற்போது காற்றாலை, கப்பல் தயாரிப்பு, விமானத் தயாரிப்புக்கு தேவையான காம்போசைட் மெட்டீரியல்கள் தயாரிக்கிறது. இந்த ஆலையில் தயாரிக்கப்படும் காம்போசைட் சொல்யூசன் இந்நிறுவனத்தின் காற்றாலை பிளேடு தயாரிப்புக்கு பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஆலை, குரிட் நிறுவனத்தின் காற்றாலை பிரிவு தொடர்பான அனைத்து செயல்பாடுகளுக்கும் மையமாக செயல்படும் என கூறப்படுகிறது.
இந்த ஆலை மூலம் நேரடியாக 300 பேர் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய காற்றாலை துறையில் தனது வணிகத்தை விரிவுபடுத்த குரிட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.