சைக்கிள் பயணம்: சுதந்திர தினத்தை போற்றும் விதமாக ராணுவ படை ஏற்பாடு..!!
இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை போற்றும் விதமாக, இந்திய ராணுவம் மற்றும் இந்திய விமானப்படை இணைந்து, வரலாற்றுச் சிறப்புமிக்க சைக்கிள் பயணத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது.
இந்த சைக்கிள் பயணம் டெல்லியில் இருந்து கார்கில் மலைப்பகுதிக்கு இரண்டு பெண் அதிகாரிகள் தலைமையில் பல வீரர்கள் சைக்கிள் பயணம் தொடங்கியுள்ளனர்.
டெல்லி முதல் டிராஸ் வரையிலான இந்த பயணம் நேற்று தொடங்கியது. ராணுவம் மற்றும் விமானப் படையைச் சேர்ந்த 20 வீரர்கள் அடங்கிய இந்தக் குழுவுக்கு, ராணுவ மேஜர் ஸ்ரிஷ்டி சர்மா மற்றும் விமானப் படையைச் சேர்ந்த ஸ்குவாட்ரான் லீடர் மேனகா குமாரி ஆகிய இரண்டு பெண் அதிகாரிகள் தலைமையேற்று செல்கின்றனர்.
டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச்சின்னம் அருகில் இருந்து புறப்பட்ட இந்த சைக்கிள் பயணத்தை, ராணுவத்தின் சமிக்ஞை பிரிவு லெப்டினன்ட் ஜெனரல் எம்.யு. நாயர், விமானப் படையின் மேற்கு பிராந்திய தளபதி ஏர் மார்ஷல் ஆர்.சதீஷ் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
சைக்கிள் பயணக் குழுவினர் 24 நாட்களில் மொத்தம் 1,600கி.மீ தொலைவுக்கு பயணம் செய்து, கார்கில் போரின் போது உயிர்த் தியாகம் செய்த வீரர்களுக்கு தக்க மரியாதை செலுத்தும் விதமாக, கார்கில் போர் நினைவுச் சின்னம் அமைந்துள்ள டிராஸ் பகுதியை ஜூலை 26-ம் தேதி சென்றடைவார்.
இந்திய இளைஞர்களிடையே தேசப்பற்றை ஊக்குவிப்பதே இதன் நோக்கம் ஆகும். சைக்கிள் பயணம் மேற்கொள்ளும் குழுவினர், தங்களது பயண வழியில் உள்ள பள்ளிக்கூட குழந்தைகளுடன் கலந்துரையாட போவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.