கலகலப்பு கஃபே – பாலிடிக்ஸ் கார்னர்
“என்ன சித்தப்பு… போன வாரம் உன்னைய ஆளப்பார்க்கவே முடியல! வீட்டுல சித்தி கூட எதும் பஞ்சாயத்தா?டெல்லி கில்லி போயிட்டியா?”
“டேய் மொசக்குட்டி… என்ன கிண்டலா? நா எதுக்கு டெல்லிக்கு போகப்போறேன்? அதுவும் என் வீட்டுப் பிரச்சனைக்கு!”
“இப்பல்லாம் நம்ம தமிழ்நாட்டுப் பிரச்சனைக்கு பஞ்சாயத்து பண்ண டெல்லிக்கு போயி மோடிய சந்திக்கிறதுதான வழக்கமா இருக்கு!”
“இது சரி கிடையாது சித்தப்பு… கல்யாணத்துல பொண்ணு மாப்பிள்ளைய தரகரை வச்சு பேசி முடிக்கிறோம்… அதுக்காக அவங்களுக்குள்ள வாழ்க்கைல தினசரி நடக்குற பிரச்சனைக்கெல்லாம் பஞ்சாயத்து பண்ண தரகரையா கூட்டிட்டு வருவாங்க? அவரே இப்பதான் நாடு நாடா டூர் அடிக்கக் கிளம்பியிருக்காரு… அவரை லோக்கல் பஞ்சாயத்துக்கெல்லாமா கூப்பிடுவாங்க!”
“பஞ்சாயத்துன்னதும் தான்டா மொசக்குட்டி ஒருத்தர் நினைவுக்கு வருது… எங்க மாமா ஒருத்தர் இருக்காருடா… ஊர்ல எந்த பஞ்சாயத்து நடந்தாலும் அவரோட சவுண்டு… சவடாலுக்கு குறைச்சலே இருக்காது! பஞ்சாயத்து சவசவன்னு போயிட்டு இருந்தால் அவரை களத்துல இறக்கிவிட்டுட்டா போதும், எதாவது ஒரு தரப்ப படு மோசமாக திட்டித்தீர்த்து களேபரத்த உண்டுபண்ணிடுவாரு!”
“ஓ… நீங்க சொல்றதப் பார்த்தா உங்க மாமா நம்ம சுனாபானா வடிவேலு மாதிரில்ல தெரியுது!”
“ஆமான்டா மொசக்குட்டி… அதேபோல, நம்ம அதிமுகவுலயும் ஒருத்தர் இருக்காரு கவனிச்சியா?”
“யாரைச் சொல்ற சித்தப்பு? நம்ம டி.ஜெயக்குமாரையா?”
“இவரெல்லாம் பத்திரிகைக்காரங்க சந்திப்புல மட்டும் தான் ஓவரா பேசிட்டு இருப்பாரு… ஆனா சி.வி.சண்முகத்தை கவனிச்சியா? பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியதுமே, “அனைத்து தீர்மானங்களையும் நிராகரிக்கிறோம்… அனைத்து தீர்மானங்களையும் இந்த பொதுக்குழு நிராகரிக்கிறது… நிராகரிக்கிறது… நிராகரிக்கிறது…”ன்னு சவுண்டா கைய உயர்த்திப் பேசி பரபரப்பாக்கிட்டாரு! அவரு பரபரப்பைத் தூண்டிய பின்னாடி தான் கே.பி.முனுசாமி, வளர்மதி எல்லாருமே சவுண்டா பேச ஆரம்பிச்சாங்க! அதுவும், மைக் முன்னால அம்புட்டு சவுண்டு தேவையில்லைன்னு தெரிஞ்சும் கே.பி.முனுசாமியே மைக்கை முழுங்கிட்ட மாதிரி சத்தமா பேசுனாரு! ஆக, சி.வி.சண்முகம் தான் அன்னைக்கு பொதுக்குழுவுல அதிரடித் திருப்பத்தை ஏற்படுத்திய முதல் பேட்ஸ்மேன்!”
“அவரென்ன இன்னைக்கு நேத்தா சித்தப்பு சவுண்டா பேசுறாரு? ஜெயலலிதா இறந்தபிறகு சசிகலாவ பொதுச்செயலாளர் ஆக்குறதுக்காக காய் நகர்த்துறப்ப, சசிகலாவுக்கு ஆதரவா “தியாகத்தலைவி சின்ன அம்மா வாழ்க”ன்னு நடு ராத்திரியிலேயே வாழ்க கோசம் போட்டு பரபரப்பை ஏத்துன ஆளாச்சே!”
“ஆமான்டா மொசக்குட்டி! இப்போ ஓபிஎஸ் நெலம எப்டி இருக்குதுடா மொசக்குட்டி?”
“பரிதாபம் தான் சித்தப்பு… முன்னல்லாம் அதிமுக பஸ்ஸோட டிரைவரா இருந்தாரு,… இப்போ பாவத்த அவரே ஃபுட்போர்டுல தொங்கிக்கிட்டு என்னைய உள்ள நுழைய விடுங்கன்னு கெஞ்சுற நிலைக்கு வந்திருக்காரு! அனேகமா இன்னும் ரெண்டு வாரத்துல அவரை பஸ்ஸ விட்டே தள்ளிவிட்டுடுவாங்க போல!”
“ஆமா… என்னயிருந்தாலும் எடப்பாடி அளவுக்கு தொண்டர்களை அரவணைச்சு… ஆள் புடிச்சு… செலவழிச்சு தன்னோட பதவியைத் தக்கவைக்கும் தெறமை இவருக்கு கொஞ்சம் கம்மி தான்!”
“ஆமா சித்தப்பு… பைசாவ நகத்தவே மாட்டாராம்… ஆனா எடப்பாடி கோடிகோடியா பணத்தை இறக்கியிருக்குறதா சொல்லிக்கிறாங்க!”
“பின்ன, வலுவான எதிர்க்கட்சியோட ஒற்றைத் தலைமைப் பதவியைக் கைப்பற்றுவது எம்புட்டு பெருமையான விஷயம்… அவ்ளோ லேசுல விட்டுடுவாரா என்ன!”
“ஆமா சித்தப்பு… இப்ப அதிமுக தலைவர்கள் அடிச்சுக்கறதால அண்ணாமலையோட பப்ளிசிட்டி ஸ்டன்ட் எதுமே பெருசா வெளில தெரியாம போயிடுச்சு சித்தப்பு!”
“அட, ஆமால்ல! இல்லன்னா எதாவது ஒரு குட்டிக்கலாட்டா பண்ணிட்டே இருப்பாரு… இப்போகூட ஜாதிப்பெயரை எல்லாரும் தங்களோட பெயரோட வச்சிக்கணும்… பெருமையா சொல்லிக்கணும்னு அவரு பேசியிருக்காரு போலயே!”
“ஆமா சித்தப்பு, கடந்த 40, 50 வருஷமாத்தான் ஜாதிப்பெயரைச் சேர்க்காமல் பெயரை எழுதப் பழகியிருக்கோம்… அப்டியெல்லாம் முற்போக்கா சிந்திக்கத் தொடங்கிட்டா அவங்க பொழப்பு என்னாகும்னு நெனச்சித்தான் இப்டி சொல்லியிருக்காரு போல!”
“ஆமா சித்தப்பு… நாங்கூட என்னோட பெயருக்கு பின்னால என்னோட ஜாதிப்பெயரச் சேர்த்துக்கலாமான்னு பார்க்கறேன்… அதுக்கப்புறம் என்னை நீ கூப்பிட்டால், ஜாதிப்பெயரோட சேர்த்துத்தான் கூப்பிட்டாகணும்!”
“மொசக்குட்டி ஒரு நிமிஷம் இரு…. என்னோட பைக் எப்டி இருக்குன்னு பாத்துட்டு வர்றேன்…”
“எதுக்கு சித்தப்பு? பைக்குக்கு என்ன?”
“அதுக்கில்லடா… இப்பல்லாம் பைக்க பாதையோரமா விட்டுட்டு வந்தால் ரோடு போடுறதாச் சொல்லி பைக்கையும் சேர்த்து ரோடு போட்டு வச்சிடுறாய்ங்களே! அதான் ஒரு சின்ன செக்கிங்!”
“சித்தப்பு… விட்டுத்தள்ளு… அப்டியாவது ஓட்ட பைக்க விட்டுட்டு கொஞ்சம் புது வண்டியா வாங்கப்பாரு! ஹஹஹஹ!”
-புத்தன்