மிதக்கும் சோலார்..!! மின் உற்பத்தியை தொடங்க தீவிரம் காட்டும் நிறுவனம்..!!

இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரிய சக்தி திட்டமாக கருதப்படும் தெலங்கானாவில் ராம குண்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 மெகாவாட் மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையத்தின் கடைசி பகுதியான 20 மெகாவாட் பிரிவு வணிக ரீதியாக உற்பத்தி தொடங்கிவிட்டதாக தேசிய அனல் மின் கழகம் அறிவித்துள்ளது.

இதன்மூலம் தென்னிந்தியாவின் மிதக்கும் சூரிய சக்தியின் மொத்த வணிக செயல்பாடு 217 மெகாவாட்டாக உயர்ந்தது. இது தவிர கேரள மாநிலத்தில் 92 மெகாவாட் மிதக்கும் சோலார் மற்றும் ஆந்திராவில் 25 மெகாவாட் மிதக்கும் சோலார் செயல்பட்டு வருகிறது.
தற்போது ரூ.423 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இத்திட்டத்தில் நீர்த்தேக்கத்தின் 500 ஏக்கர் பரப்பளவில் இந்த சூரிய மின் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

40 தொகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றும் 2.5 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது. 11,200 சோலார் தொகுதிகளைக் கொண்டுள்ளது.
இதை 33 கிலோ வோல்ட் நிலத்தடி கேபிள்கள் மூலம் மின்சாரம் கடத்தப்பட்டு சேமிக்கப்படுகிறது.மிதக்கும் சோலார் பேனல்கள் இருப்பதால், நீர்நிலைகளில் இருந்து ஆவியாதல் விகிதம் குறைக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.
இதனால் ஆண்டுக்கு சுமார் 32.5 லட்சம் கன மீட்டர் நீர் ஆவியாவதை தவிர்க்கலாம். சோலார் மாட்யூல்களுக்கு அடியில் உள்ள நீர்நிலைகள் அவற்றின் சுற்றுப்புற வெப்பநிலையை பராமரிக்க உதவுகிறது. அதன் மூலம் சோலார் பேனல்களின் செயல்திறன் மற்றும் உற்பத்தி மேம்படுகிறது என்று அந்த நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.