இறந்த பறவைகளை தேடி – தேசியப் பறவைக்கு பாய்சன் தரும் மக்கள்?
இந்த முறை தமிழ்நாடு கோவை மாவட்டத்திலிருந்து மயில்களின் இறப்பு பற்றி நேரடியாக தொலைப்பேசித் தகவல் கிடைத்தது. அதுவும் இறந்து ஒரு சில மணி நேரங்களில். உடனடியாக சம்பவம் நடந்த இடத்தை விசாரித்து அலுவலக வாகனத்தில் கிளம்பினோம். கருமத்தம்பட்டி வரை ஓட்டுனருக்கு வழி தெரிந்திருந்தது. அதற்கு பிறகு “மயில் இறந்த காடுவெட்டிபாளையம் தோட்டம் எங்க இருக்குங்னா?” என்று ஆங்காங்கே தென்பட்டவர்களிடம் வழிகேட்டுக் கொண்டே மாலை ஐந்து மணி அளவில் சென்றடைந்தோம்.
எங்கள் வண்டி தோட்டத்துக்குள் நுழைந்ததும் நாய்கள் குலைத்தன, தோட்டத்து உரிமையாளர் வாகனத்தை நோக்கி வந்தார். மயில்களின் உடல் இருந்த இடத்தை நோக்கி பேசிக்கொண்டே நடந்தோம். தோட்டத்தின் ஒரு ஓரத்தில் ஆறு மயில்கள் ஒன்றாக இறந்து கிடந்தன, மயில்களின் உடலை புலுக்கள் உண்ண ஆரம்பித்திருந்தன. அந்த இடங்களை முழுவதும் அலசி ஆராய்ந்ததில் ஆங்காங்கே ஓரிரு அரிசி சிதறிக் கிடந்தது.
அருகிலிருந்தவர்களிடமும் விசாரித்ததில் “விரோதத்தால் பலி வாங்க பக்கத்து தோட்டக்காரர், எங்கள் தோட்டத்துக்குள் அரிசியில் விசம் கலந்து மயிலுக்கு கொடுத்து கொன்னுட்டாங்க, பக்கத்து தோட்டத்துல செத்தத இந்த தோட்டத்துல கொண்டுவந்து போட்டுட்டாங்க“ போன்ற முன்னுக்கு பின் முறனான பதில்களே வந்தன. விசாரித்ததின் முடிவில் விசம் வைத்து கொன்றதை உறுதிபடுத்திக்கொண்டு மயில்களின் உடலை எடுத்துக்கொண்டு எங்கள் ஆய்வகத்துக்கு போய்ச்சேர்கையில் இரவு மணி ஒன்பது. ஓட்டுனரே மயில்களின் உடலை ஆய்வகத்துக்குள் உள்ள குளிரூட்ட பட்ட (-4゚C) அரையில் வைக்க உதவி செய்தார்.
இரவு நேரத்தில் உடல் கூறு ஆய்வு செய்தால் உடலில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முழுமையாக கவனிக்க முடியாது, காரணங்களை கண்டறிவதும் கடினம் என்பதால் அடுத்த நாள் காலை ஆறு மணிக்கே மயில்களின் உடலை உடல்கூறு ஆய்வு செய்து பார்க்கையில் எதிர்பார்த்த்தைப் போன்றே உணவுப் பையில் அரிசிகளே இருந்தன.
இந்த கொலை பற்றி விசாரிக்க வழக்கு தொடரப்பட்டிருந்தது, எங்களது ஆய்வு முடிவைப் பொருத்தே வழக்கு விசாரனையும் தொடரவேண்டியிருந்தமையால் நாங்கள் தெளிவான விளக்கங்களுடன் ஓரிரு நாட்களில் கொடுக்கவேண்டியிருந்தது ஆதலால் உடனடியாக இராசயன பரிசோதனை செய்தோம்.
ஆய்வின் முடிவில் மயில்களின் இறப்பிற்கு காரணம் Monocrotophos பூச்சிக்கொல்லி தான் காரணம் என தெரியவந்தது. இந்தக் குறிபிட்ட பூச்சிக்கொல்லி சோளம், சூரியகாந்தி, தக்காளி, பருத்தி, உருளைக்கிழங்கு அகிய தாவரங்களை உணவாக உட்கொள்ளும் தண்டு துளைப்பான், உருளைக்கிழங்கு கிழங்கு அந்துப்பூச்சி போன்ற பூச்சிகளைக் கொல்ல விவசாய நிலங்களில் தெளிக்கப்படுகிறது.
மனிதர்களின் உடலில் குறைவான அளவில் இருப்பினும் கண் எரிச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைச்சுற்றல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். இவ்வளவு ஏன் சுவாசித்தாலே இருமல் மார்பு வலி, இரத்தம் கலந்த மூக்குசளி, மற்றும் மூச்சுத்திணறல் ஏற்படும்.
இத்தகைய தீங்கு ஏற்படுத்தும் மோனோகுரோட்டோபாஸ் பூச்சிக்கொல்லி 1965 இல் Shell Chemical Co. and Ciba Geigy Limited மற்றும் Ciba Geigy Limited ஆகிய இரண்டு நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டது. இது முதலில் பருத்தி மற்றும் மாதுளம் பழங்களில் உள்ள பல்வேறு பூச்சி பூச்சிகளைக் கட்டுப்படுத்த ஆஸ்திரேலியாவில் பதிவு செய்யப்பட்டு சில நெறிமுறைகள் மற்றும் வரம்புகளுடன் மற்ற பயிர்களுக்கும் பயன்படுத்தப்பட்டது. ஆஸ்திரேலியாவின் United Phosphorus என்ற நிறுவனம் 1970-ன் தொடக்கத்தில் இந்தியாவில் தயாரிக்க ஒப்புதல் வாங்கியது. இதே போல் பத்து ஆண்டுகளில் ஒவ்வொரு நாடுகளாக வேகமாக தயாரிக்கபட்டு பயன்படுத்தபட்டது.
ஆனால் இதன் உண்மை முகம் பத்தாண்டுகளில் வெளிப்பட்டது. ஆமாம் பூச்சிகளை மட்டுமல்ல பல பறவைகளில் மிகப்பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தியது. மேலும் விவசாய நிலங்களில் தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லி வாய்க்கால் நீரில் கலந்து வாய்க்கால் நீர் செல்லும் வழியெல்லாம் நீரில் மற்றும் கரையோரங்களில் இருந்த பூச்சிகள், தவளைகளை பாதிப்பதோடு நிற்காமல், இந்த நீர் இறுதியாக நீர்நிலைகளில் கலக்கும் பொழுது அங்குள்ள மீன்கள், பாம்புகள் பறவைகள் என உணவுச்சங்கிலி மொத்தமும் பாதிக்கப்படவே செய்வதை முதன் முதலில் அமெரிக்க கவனித்து. பல கட்ட ஆய்வுகளுக்கு பின் 1989இல் பின்வாங்கியது. அதனைத் தொடர்ந்து ஒப்புதல் கொடுத்த அதே வேகத்தில் அனைத்து ஒப்புதல்களையும் அனைத்து நாடுகளும் திரும்ப பெற்றன.
ஆனால் நம் இந்திய தேசம் மட்டும் விதிவிலக்கு. நம் இந்திய தேசத்தில் 2005 ஆம் ஆண்டு காய்கறிகளைத் தாக்கும் பூச்சிகளை கொல்ல பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. தற்போது, பருத்தி, புகையிலை, வணிகத்துக்காக விளைவிக்கப்படும் பூச்செடிகள் போன்ற தாவரங்களைத் தாக்கும் பூச்சிகளைக் கொல்ல மட்டும் மோனோகுரோட்டோபாஸ் பயன்படுத்தப்படுகிறது. இது பாதிப்பை ஏற்படுத்தாது என்ற மூடநம்பிக்கையை தனியார் பெறு நிறுவனங்கள் நம் தேசப்பற்றாளர்கள் மனதில் பதியவைத்துள்ளது.
கள ஆய்வின் போது ஆந்திர மாநிலத்தில் விவசாயிகளிடம் தரவுகளைச் சேகரிக்கும் பொழுது பூச்சிக்கொல்லி துர்நாற்றத்தால் பூக்களை வாங்குவது குறைந்து வருவதால் தற்போது ரோஜா செடியில் பூச்சிக்கொல்லி அடிப்பதில்லை என்ற தகவல் அதிர்ச்சியாகவே இருந்தது.
மேலும் மனிதர்களின் பசியைப்போக்க விவசாயக் கடன் வாங்கி, வறுமையில் தற்கொலை செய்துகொல்லும் விவசாயிகள் ஏன் மயிலுக்கு விசம் வைத்துக் கொல்ல வேண்டும்?. இது போன்ற பல குழப்பங்களும், கேள்விகளுமே என்னை தொடர்ந்து பயணிக்கவைக்கிறது.
பயணமும் காட்சியும் தொடரும்…….