தனது பிறந்தநாளை முன்னிட்டு ரூ. 60 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை வழங்க முன்வந்த அதானி..!!
அதானியின் 60 வது பிறந்தநாளையொட்டி அவரது குடும்பத்தினர் 60 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை அளிக்க முடிவு செய்துள்ளனர். கௌதம் அதானி இன்று தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
இதையொட்டி அவரது குடும்பத்தினர் ரூ.60 ஆயிரம் கோடி நன்கொடை அளிக்க முடிவு செய்துள்ளனர். சுகாதாரம், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு துறைகளுக்கு இந்த நன்கொடை வழங்கப்படும் என்றும் , அதானி அறக்கட்டளை சார்பில் இந்த பணிகள் நிர்வகிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதானி குழுமம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கவுதம் அதானியின் தந்தை சாந்திலால் அதானியின் 100 வது பிறந்தநாளை ஒட்டியும், கவுதம் அதானியின் 60-வது பிறந்த நாளை ஒட்டி பல்வேறு சமூக நலன்களுக்காக அதானி குடும்பம் 60 ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை அளிக்க முடிவு செய்தோம்.
கிராமப்புறங்களில் இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என்றும் மேலும் எந்தெந்த துறைகளுக்கு முன்னுரிமை கொடுக்கலாம் என்பது குறித்து விரைவில் தெரிவிப்போம் என கூறியுள்ளனர்.
நன்கொடையாக வழங்கப்படும் இந்த ரூ.60 ஆயிரம் கோடி, அதானியின் மொத்த சொத்து மதிப்பில் வெறும் 8 சதவீதம் என்று கூறப்படுகிறது. இந்திய கார்ப்பரேட் வரலாற்றில், ஒரு நிறுவனம் சார்பில் வழங்கப்படும் மிகப்பெரிய நன்கொடைகளில் இதுவும் ஒன்றாக பார்க்கப்படுகிறது.