சிறந்த ஊழியர்கள் அச்சப்பட தேவையில்லை..!! பணி நீக்கம் குறித்த கேள்விக்கு எலான் மஸ்க் பதில்..!!
பிரபல சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரை டெஸ்லா நிறுவன தலைவர் எலான் மஸ்க் கடந்த ஏப்ரல் மாதம் விலைக்கு வாங்கினார். 44 பில்லியன் டாலருக்கு வழங்குவதாக அறிவித்தார்.
ட்விட்டர் எலான் மஸ்க் நிறுவனத்துக்கு கை மாறுவதால் இந்த வலைதளத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு புதிய அம்சங்கள் புகுத்தப்படும் என தகவல்கள் வெளியாகின. அதேபோல், ட்விட்டர் நிறுவனத்திலும் பல மாற்றங்கள் நிகழும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் முடிவை எலான் மஸ்க் நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியது.
இந்நிலையில் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் ட்விட்டர் ஊழியர்களுடன் எலான் மஸ்க் நேற்று கலந்துரையாடினார். ட்விட்டர் ஒப்பந்தம் கையெழுத்தாகி அடுத்து, அதன் ஊழியர்களை எலான் மஸ்க் சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.
இந்த சந்திப்பின் போது ஊழியர்களின் ஏராளமான கேள்விகளுக்கு எலான் மஸ்க் பதிலளித்தார். அப்போது ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கினால் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்களா என சிலர் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் பதிலளிக்கையில் ட்விட்டர் நிறுவனத்துக்கு வரும் வருமானத்தை விட செலவினங்கள் அதிகமாக உள்ளன. இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். அதற்கு சில மாற்றங்கள் இருக்கும். தங்கள் வேலை பறிபோய் விடும் என சிறந்த ஊழியர்கள் அச்சப்பட தேவையில்லை எனக் கூறி முடித்தார்.