தமிழ்நாட்டின் டிசைன் அப்படி – நாங்களும் ரவுடின்னு ஃபார்ம் ஆகுறோம் சார்..
அ.தி.மு.க.வின் இரட்டைத் தலைமைக்குள்ளே நீயா-நானா என்ற குடுமிப்பிடிச் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. அதைத் தீர்க்கவே அவர்களால் முடியவில்லை. அந்த இருவரையும் இயக்கும் பா.ஜ.க., அ.தி.மு.க. தோளில் ஏறி 4 சீட்டுகளை ஜெயித்துவிட்டு, நாங்கள்தான் எதிர்க்கட்சி என்பது போல கம்பு சுற்றிக் கொண்டே இருக்கிறார்கள். வாயாலேயே வடை சுடுவதும், வெறுங்கையால் கம்பு சுற்றுவதும் பா.ஜ.க.வுக்கு சர்வசாதாரணம். அதில் அண்ணாமலைகள் தனி ரகம். இதை உண்மையான அ.தி.மு.கவினரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதனாலதான், சொந்தக் கட்சியின் பிரச்சினைக்கிடையிலும் ஓ.பி.எஸ். ரொம்ப ஆவேசமா, நாங்கதான் உண்மையான எதிர்க்கட்சி. பா.ஜ.க. காட்டுவது மாயத் தோற்றம்னு சொன்னாரு.
அ.தி.மு.க. மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் வரை பா.ஜ.க. இப்படித்தான் செயல்படும். தங்களுக்கு எதிரான அரசியல் குரல்களை அடக்குவதும், ஆள் இல்லா வீட்டுக்குள் எதுவோ நுழைந்தது போல நுழைவதும் ஒவ்வொரு மாநிலத்திலும் பா.ஜ.க .செய்கின்ற வேலைதான். பா.ஜ.க ஆளும் மாநிலங்களில் அரசுக்கு எதிராக உரிமைக் குரல் கொடுப்பவர்களின் வீடுகளையும் அவர்களுக்கு சொந்தமான கட்டடங்களையும் புல்டோசரை வைத்து இடிக்கும் கொடூரக் கலாச்சாரம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில், காவி உடுத்திய முதல்வர் யோகி ஆதித்யானந்தா ஆளும் உத்தரபிரதேசம் முதலிடம் பெற்றுள்ளது.
நபிகள் நாயகம் பற்றி பா.ஜ.கவின் நூபுர் சர்மா பேசிய கருத்துகளுக்கு எதிரானப் போராட்டத்தை தூண்டி விட்டதாகக் கூறி, முஸ்லிம்களின் வீடுகளை, விதிகளை மீறி கட்டிய கட்டடங்கள் என்று கூறி புல்டோசரை விட்டு இடித்துத் தள்ளியுள்ளது யோகியின் பா.ஜ.க அரசு. உத்தரபிரதேசத்தில் அட்டகாசம் செய்யும் புல்டோசர்கள், இந்திய எல்லைக்குட்பட்ட பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி அமைத்திருக்கும் திடீர் கிராமங்களை இடித்துத் தள்ளுமா எனக் கேட்கிறார்கள் உண்மையான தேசபக்தர்கள். நாங்கதான் தேசபக்தர்கள் என்று சொல்லிக்கொள்ளும் சாவர்க்கர் (மன்னிப்பு) பரம்பரை பா.ஜ.க.விடமிருந்து பதிலே இல்லை. அ.தி.முக. தரப்பிலிருந்து பா.ஜ.க.வை நோக்கி கேள்வி கேட்க முடியாது. ஃப்யூஸ் பிடுங்கப்படும்.
ஆனா, தமிழ்நாட்டில் பா.ஜ.க. பல்பு வாங்க முடியுமே தவிர, பிரகாசிக்க முடியாது. மொழிக்கான உரிமைகளைப் பெறுவதில் தமிழர்களைப்போல் தெலுங்கர்கள் அனைவரும் தங்கள் மொழிக்காக ஒன்றுபட வேண்டும் “..என உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி. ரமணா சொல்லியிருந்தார். அது உண்மைதான். கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் உன் உதிரத்தில் உதித்து வந்தது ஆயினும், ஆரியம் போல் உலக வழக்கு ஒழிந்த அழிந்து சிதையா உன் சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே என்று மனோன்மணியம் காப்பியத்தில் பாடினார் பேராசிரியர் சுந்தரனார்.
தமிழ் மொழியிலிருந்து கிளைத்த மொழிதான் தெலுங்கு. அதன் மீது சமஸ்கிருதம் ஏற்படுத்திய தாக்கத்தால், ஏராளமான வடசொற்கள் கலந்துவிட்டன. தாய்மொழி மீது தெலுங்கு மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பற்று இருந்தாலும், தங்கள் மொழி மீது ஏவப்படும் ஆதிக்கத்தை எதிர்ப்பதில் மற்ற மொழியினருக்கு முன்னோடியானவர்கள் தமிழர்கள். தொல்காப்பியம், திருக்குறள், சங்க இலக்கியங்கள், சைவ-வைணவத் திருமுறைகள், வள்ளலாரின் திருவருட்பா உள்ளிட்ட அனைத்துமே வடமொழியிலிருந்து தமிழைக் காத்த படைப்புகள்தான். சுதந்திர இந்தியாவில் இந்தியாவில் உள்ள மற்ற மொழிக்காரர்கள் இதைப் புரிந்து கொள்வதற்கு அரை நூற்றாண்டுக்கு முன்பே தமிழர்கள் புரிந்துகொண்டார்கள். போராடினார்கள். தாய்மொழியைக் காத்தார்கள். அப்போது, மற்ற மாநிலத்தவர்கள் தமிழர்களைத் தேசவிரோதிகள் போல சித்தரித்ததும் உண்டு. ஆனால், அரை நூற்றாண்டு கழித்து இந்தியாவில் உள்ள பல மாநிலத்தவர்களும் இந்தி-சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கத் தொடங்கிவிட்டனர். இப்போதைய பா.ஜ.க ஆட்சியில் இந்தியிடமிருந்தும் சமஸ்கிருதத்திடமிருந்தும தமிழையும் மற்ற மொழிகளையும் காக்க வேண்டியிருக்கிறது.
இதற்கு நடுவிலே ஆளுநர் ஆர்.என்.ரவி, “ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியால் தான் இந்தியா உருவாக்கப்பட்டது” என்று அடித்துவிட்டிருக்கிறார். “சோமநாதர் கோவில் சொத்துகளை அழித்து கந்தகார், பெஷாவர் நகரங்களை கஜினி முகமது உருவாக்கினார். அந்த நகரங்கள் அமெரிக்க குண்டுகளால் தகர்க்கப்பட்டதிலிருந்து சனாதன தர்மத்தின் வலிமையை அறியலாம் என்றார். அதற்குப் பதிலளித்த டி.ஆர்.பாலு, “மனிதனை நான்கு வர்ணமாகப் பிரித்து, அதில் உயர்வு தாழ்வு கற்பித்து, சலுகையிலும் தண்டனையிலும்கூட சாதி வேற்றுமையை நிலை நிறுத்திய சனாதன காலத்தின் மேல் பிரிட்டிஷ் ஆட்சியின் சட்டக் குண்டுகள் வீசப்பட்டு 200 ஆண்டுகள் ஆகிவிட்டன” என்று ஒரே போடாகப் போட்டுவிட்டார்.
எத்தனை அடி வாங்கினாலும், அது போன மாசம்.. இது இந்த மாசம்ங்கிறது ரேஞ்சுல பா.ஜ.க தரப்பு, நானும் ரவடின்னு ஃபார்ம் ஆயிட்டேன்னு காமெடி பண்ணிக்கிட்டே இருக்கு.