என்ன கொரோனா 4-வது அலையா.? முடியலடா சாமி..!
இந்தியாவில் கொரோனா பரவல் கடந்த சில தினங்களாக குறைந்து வருகின்றது. இதனால் நாட்டு மக்கள் சிறிது நிம்மதி பெருமூச்சு விட்டனர். இந்நிலையில், இன்று ஆய்வு ஒன்றில் வெளியான தகவல் மக்களை மீண்டும் அச்சுறுத்தி உள்ளது. இந்தியாவில் வருகிற ஜூன் மாதம் கொரோனா நான்காவது அலை தொடங்க வாய்ப்புள்ளதாக கான்பூர் ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் தற்போது, கொரோனா மூன்றாவது அலை குறைந்து வரும் சூழலில், இந்த தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 22 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 24 ஆம் தேதி வரை கொரோனா நான்காவது அலை பரவ வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். புதிய வகை கொரோனா மற்றும் தடுப்பூசி போட்டதன் விகிதம் உள்ளிட்டவை அடிப்படையிலேயே, கொரோனா நான்காவது அலையின் தீவிரம் இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
குறிப்பாக ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை, கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். கான்பூர் ஐ.ஐ.டி ஆராய்ச்சியாளர்கள் மூன்றாவது முறையாக, கொரோனா அலையின் பாதிப்பை கணித்துள்ளனர். கடந்த அலையின் போது இவர்களின் கணிப்பு, கிட்டத்தட்ட சரியாக இருந்தது.