ஏழைகளுக்கு உதவ திமுகவின் ’அன்புச்சுவர்’

தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்க்காக மே 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து, தொற்று பாதிப்பு குறையாததால் மேலும், ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லா முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்க முதலமைச்சர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஊரடங்கு காலத்தில் பல ஏழை, எளிய மக்கள் உணவு கிடைக்காமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்குகாக திமுக புது முயற்சியெடுத்துள்ளது.
’ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் கீழ் விழுப்புரத்தில், அதன் சட்டமன்ற உறுப்பினர் ரா.லட்சுமணன் ’அன்புச்சுவர்’ எழுப்பியுள்ளார்.
விழுப்புரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வளவனூர், விழுப்புரம் பழைய பேருந்து நிலையம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகிய மூன்று இடங்களில் அன்புச்சுவர் எழுப்பப்பட்டுள்ளது.
இத்திட்டத்தினை, அமைச்சர் பொன்முடி துவங்கி வைத்துள்ளார். ஊரடங்கு காலம் முழுவதும் இங்கு தினமும் ஏழை, எளிய மக்களுக்கு உணவு வழங்கப்படும் என கூறியுள்ளனர்.