மீனவர்கள் யாரும் கடலுக்குச் செல்லக்கூடாது வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டு அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இது வரும் 3ம் தேதி புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக கடலூர் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து கடலூர் மாவட்டத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் கடலூர் மீன்பிடித்துறை துறைமுகத்தில் ஒலிபெருக்கி மூலம் இன்று மீன்வளத்துறை அதிகாரிகள் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
அப்பொழுது வங்க கடலில் அசாதாரண ஒரு சூழ்நிலை நிலவி வருவதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் தங்களது மீன்பிடி படகுகள் மற்றும் வலைகளை பாதுகாப்பான இடங்களில் வைத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் எச்சரிக்கை மீறி கடலுக்கு செல்லும் மீனவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை அதிகாரிகள் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.
இதேபோல் கடலூர் மாவட்டத்தில் அனைத்து துறை அதிகாரிகளும் வரும் 2 மற்றும் 3 ம் தேதி தலைமையகத்தில் இருக்க கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதுடன் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் பஞ்சாயத்து செயலாளர்கள் அனைவரும் அந்தந்த கிராமங்களில் தங்கியிருக்கவும் உத்தரவிட்டுள்ளார்.