ராஜஸ்தானி சங்கத்தினர் உள்ளிருப்பு போராட்டம்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தின் அலுவலகத்தை பூட்டிச் சென்ற முன்னாள் நிர்வாகிகளை கண்டித்து புதிய நிர்வாகிகள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள ராஜஸ்தானி சங்கத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராஜஸ்தான்  மக்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த சங்கத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படும் நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சங்க தேர்தல் நடைபெறாததால் முன்னாள் தலைவர் மதன் லால் பாப்னா தொடர்ந்து தலைவராக இருந்தார். 

இதனிடையே ராஜஸ்தானி சங்கத்தின் உறுப்பினர்கள் சுமார் 450 பேரை எந்த காரணமும் இல்லாமல் முன்னாள் தலைவர் மதன்லால் பாப்னா நீக்கியுள்ளார். இதையடுத்து உறுப்பினர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில்  உறுப்பினர்கள் நீக்கம் செல்லாது என நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது.இதையடுத்து கடந்த 5 ம் தேதி நடைபெற்ற அச்சங்க தேர்தலில் புதிய தலைவராக சர்வான் பொஹரா உட்பட 26 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். 

ஆனால் புதிய நிர்வாகிகளிடம் பொறுப்புகளை ஒப்படைக்காமல் பழைய நிர்வாகத்தினர் பிரச்சினையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.இது குறித்து புதிய நிர்வாகிகள் புகாரின் பேரில் போலீஸார் பேச்சுவார்த்தைக்கு அழைத்தும் பழைய நிர்வாகிகள் வராமல் புறக்கணித்த நிலையில், தற்போது சங்க அலுவலகத்தையும் பூட்டிச் சென்றுள்ளனர். 

இதனால் இன்று அலுவலகத்திற்கு வந்த புதிய நிர்வாகிகள் உட்பட 50 க்கும் மேற்பட்டோர் ராஜஸ்தானி சங்க வளாகத்திலேயே முழக்கங்கள் எழுப்பி  உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்போது   முன்னாள் தலைவர்  உள்ளிட்ட நிர்வாகிகளை கண்டித்து முழக்கங்களை  எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

இது குறித்து பேசிய அச்சங்கத்தின் புதிய  தலைவரான சர்வான் பொஹரா, உடனடியாக பழைய நிர்வாகத்தினர் பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டும் என்றும் கோவையில் மிக பழமையான புகழ்பெற்ற ராஜஸ்தான் சங்கத்திற்கு முன்னாள் நிர்வாகிகள்  அவபெயரை ஏற்படுத்தி வருகின்றனர் எனவும் கூறினார். 

விரைவில் நிர்வாக பொறுப்பு மற்றும் அலுவலக சாவியை ஒப்படைக்கவில்லை என்றால் தொடர்ந்து சங்க வளாகத்திலேயே உண்ணாவிரத  போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும்  தெரிவித்தார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *