காதலிக்கு குளிர்பானத்தில் சயனைடு கொடுத்து கொலை செய்த பூசாரி கைது

சேலம் அருகே தகாத உறவு விவகாரத்தில் கள்ளக்காதலிக்கு குளிர்பானத்தில் சயனைடு  கலந்து கொடுத்து,  கொலை செய்த பூசாரியை தாரமங்கலம் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குறி கேட்க வந்த போது ஏற்பட்ட நெருக்கம்,  கள்ளக்காதலாக மாறியது. பணத்தை மட்டும்  வாங்கிக் கொண்டு,  அடிக்கடி உறவுக்கு மறுத்து வந்ததால் ஆத்திரமடைந்த பூசாரி,  தீர்த்துக்  கட்டியதாக தகவல்.

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள சேடப்பட்டி சேர்ந்தவர் பசுவராஜ் (38).  இவருடைய மனைவி செல்வி(28). கல் உடைக்கும் தொழிலாளியான பசுராஜ் பெங்களூரில் வேலை பார்த்து வருகிறார். மனைவி செல்வி மட்டும் சேடப்பட்டியிலேயே வசித்து வருகிறார். இதனால் பசுராஜ் தினமும் மனைவியிடம் போனில் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.  

கடந்த 15 ஆம் தேதியிலிருந்து மனைவியை தொடர்பு கொள்ள முடியாமல் தவித்த பசுவராஜ் ,  மனைவியின் போன் சுவிட்ச் ஆஃப் ஆகி இருந்ததால், உடனடியாக கிளம்பி தாரமங்கலம் வந்தார்.  ஆனால் வீட்டில்  மனைவி செல்வியை காணவில்லை. இதனையடுத்து தாரமங்கலம் காவல்நிலையத்தில் பசுராஜ் மனைவியை காணவில்லை என புகார் கொடுத்தார். 

தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான செல்வியை தேடி வந்தனர் அப்போது அவரது செல்போனில் யாரெல்லாம் தொடர்பில் இருந்தார்கள் என்பது பற்றியும் அவர் அடிக்கடி செல்லும் இடங்கள் பற்றியும் விசாரித்தனர் இந்த நிலையில் கடந்த 15 ஆம் தேதி சேலம் இரும்பாலை அருகே உள்ள பெருமாம்பட்டியில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலுக்கு குறி கேட்க சென்றதை போலீசார் கண்டறிந்தனர்.  

அதனால் அந்த கோவிலுக்கு சென்று விசாரணை மேற்கொண்ட போது,  கோவிலில் இருந்து 50 மீட்டர் தொலைவில் செல்வி மர்மமான முறையில்,  வாயில் நுரை தள்ளியப்படி  இறந்து கிடந்தது தெரியவந்தது. மேலும் அவரது கழுத்தில் அணிந்திருந்த நகையை காணவில்லை. இதனால் மர்ம நபர்கள் அவரை கொலை செய்து விட்டு நகையை திருடி சென்றிருக்கலாம் என்ற வகையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.  

இதனையடுத்து நேற்று முன்தினம் செல்வியின் உடலை கைப்பற்றிய போலீசார்,  பிரேத பரிசோதனைக்காக உடலை  சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தொடர் விசாரணை மேற்கொண்டது பெருமாம்பட்டி பெரியாண்டிச்சி அம்மன் கோவில் பூசாரியான பாறைக்காடு பகுதியைச் சேர்ந்த குமார் (42) என்பவருக்கும் செல்விக்கும் பழக்கம் இருப்பது தெரிய வந்தது. 

சில மாதங்களுக்கு முன்பு பெரியாண்டிச்சி அம்மன் கோவிலுக்கு செல்வி குறி கேட்க வந்துள்ளார்.  

அப்போது பூசாரி குமாருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் இருவருக்கும் இடையே  தகாத உறவு ஏற்பட்டுள்ளது.  இதனால் இருவரும் தனிமையில் சந்தித்து வந்துள்ளனர்.  இந்த நிலையில் தான் சில நாட்களுக்கு முன்பு பூசாரி குமாரிடமிருந்து செல்வி முப்பதாயிரம் ரூபாய் பணத்தை வாங்கியுள்ளார்.  அந்த பணத்திற்கு பெங்களூரில்  இருந்து கணவர் மூலம் குறைந்த விலைக்கு  தங்க காசு வாங்கி வருவதாக சொல்லி உள்ளார். 

ஆனால் தங்க காசு வாங்கி கொடுக்காமல் இருந்ததோடு,  உறவுக்கு வர மறுத்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனால் பூசாரி குமார்,  கடந்த 15ஆம் தேதி செல்வியை கட்டாயப்படுத்தி  கோவிலுக்கு வரும்படி அழைத்துள்ளார்.  அதன்படி அவர் வந்துள்ளார்.  வந்த இடத்தில் தனது ஆசைக்கு இணங்கும்படி கூறியிருக்கிறார்.  

ஆனால் அதற்கு செல்வி மறுப்பு தெரிவித்துள்ளார்.  இதனால் தனது பணத்தை  திரும்ப தராமல் உறவுக்கு வர மறுத்ததால் ,  குளிர்பானத்தில் சயனைடு கலந்து கொடுத்து செல்வியை கொலை செய்து விட்டு,  அவரது கழுத்தில் அணிந்து இருந்த நகையை எடுத்துக் கொண்டு குமார் தப்பியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்தது.  இதனையடுத்து நேற்று மாலை  போலீசார், பூசாரி குமாரை பிடித்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இக் கொலைச் சம்பவம் தாரமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *